Published : 28 Jan 2020 07:30 AM
Last Updated : 28 Jan 2020 07:30 AM
“பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் மூலம் மழைநீர் சேகரிப்புதிட்டத்தை தமிழ்நாடு செயல்படுத்தி உள்ளது’’ என்று மன் கி பாத் வானொலி உரையில் பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழையும், வானொலியில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மத்தியில் பாஜக 2-வது முறை ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் இந்த வழக்கத்தைப் பிரதமர் மோடி பின்பற்றி வருகிறார்.
பிரதமர் மோடியின் 2020- ம் ஆண்டின் முதல் மனதின் குரல் உரை நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினத்தன்று நடைபெற்றது. வானொலியில் மோடி உரையாற்றியது 61-வது நிகழ்ச்சியாகும். குடியரசுதினத்தை முன்னிட்டு பிரதமரின்உரை காலையில் ஒலிபரப்பாகவில்லை. அதற்கு பதில் மாலை ஒலிபரப்புச் செய்யப்பட்டது.
தனது உரையில் பிரதமர் மோடி கூறியதாவது:
இந்தியாவுக்கே முதன் முறையாக, பலவித புதிய மற்றும் வித்தியாசமான திட்டங்களை தமிழ்நாடு அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆழ்துளை கிணறுகளால் நிகழ்கின்ற விபத்துக்களை தடுக்கவும் இத்திட்டம் உதவும்.தமிழகத்தின் இந்த திட்டத்தின் மூலம் மழைநீரை அதிகமாகச் சேகரிக்கமுடியும். மாநிலத்தின் தண்ணீர் தேவையை எதிர்கொள்ள முடியும். இந்த வழிமுறையை இந்தியாவின் மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.
இந்திய வீரர்களை ஊக்குவிக்க ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். கால்பந்து விளையாட்டில் புகழ்பெற்றவர் யார்என்று கேட்டால் டேவிட் பெக்காம் என்று கூறுவீர்கள். அவரைப் போன்றஇளைஞர் ஒருவர் குவாஹாத்தியில் இருக்கிறார். அவர் சைக்கிள் பந்தயத்தில் 200 மீட்டர் ஸ்பிரின்ட் நிகழ்வில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்த தேசிய அளவில் ‘கெலோ’ இந்திய பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதன் முதல் போட்டி பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச்1-ம் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிகள் ஒடிசா மாநிலத்தின் கட்டாக், புவனேஸ்வர் நகரங்களில் நடக்க உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT