Published : 27 Jan 2020 02:40 PM
Last Updated : 27 Jan 2020 02:40 PM
ஐஐடி பேராசிரியர்கள், முன்னாள் மாணவருக்கு பத்ம விருதுகள் அளிக்கப்படுவது குறித்து ஐஐடி நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக சேவை, ஆன்மிகம், கலை, மருத்துவம், இலக்கியம், பொறியியல், கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன.
அதன்படி தேசத்தின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், பிரதீப் தலப்பி்ள்(அறிவியல் மற்றும் பொறியியல்), காலே சாஹிப் மகபூப், ஷேக் மகபூப் சுபானி(கலை), புதுச்சேரியைச் சேர்ந்த எம்.வி.முனுசாமி, கிருஷ்ணபக்தர்(கலை), மனோகர் தேவதாஸ்(கலை), லலிதா &சரோஜா, சிதம்பரம்(கூட்டாக விருது கலை) ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்(சமூகசேவகர்), புதுச்சேரியைச் சேர்ந்த மனோகர் தாஸ்(கல்வி, இலக்கியம்), வேணு ஸ்ரீனிவாசன்(தொழில்,வர்த்தகம்) ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஐஐடி பேராசிரியர்கள், முன்னாள் மாணவருக்கு பத்ம விருதுகள் அளிக்கப்படுவது குறித்து ஐஐடி நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. ஐஐடி வேதியியல் துறை பேராசிரியர் பிரதீப் தலப்பிள் மற்றும் கவுரவப் பேராசிரியரும் டிவிஎஸ் நிறுவனத் தலைவருமான வேணு ஸ்ரீனிவாசன் ஆகிய இருவருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐஐடி முன்னாள் மாணவரும் ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்ஷியல் ஹோல்டிங்க்ஸ் நிறுவனருமான ப்ரேம் வத்சா பத்ம ஸ்ரீ விருது பெற உள்ளார். இவர் 1971-ம் ஆண்டு சென்னை ஐஐடி மாணவர் ஆவார்.
''இவர்கள் மூவரின் பணி மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்படுவது குறித்து ஐஐடி நிறுவனம் வாழ்த்து தெரிவிக்கிறது'' என்று ஐஐடி சார்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT