Published : 27 Jan 2020 10:58 AM
Last Updated : 27 Jan 2020 10:58 AM

இந்திய கிரிக்கெட் வரலாறு: உலகக் கோப்பையில் வெற்றி

1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் வலுவான இங்கிலாந்து அணியைச் சந்தித்தது இந்தியா. தற்போதைய சூழலில் ஆப்கானிஸ்தான் அணி, உலகக் கோப்பையின் அரைஇறுதிச் சுற்றுக்குள் நுழைந்தால் மற்ற அணிகள் என்ன நினைக்குமோ, அதுதான் அப்போதும் நடந்தது.

இந்திய அணி அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்ததற்கு காரணம் அதிர்ஷ்டம் என்றுமற்ற அணிகள் நினைத்தன. இப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து ஆடவிருந்த இங்கிலாந்து அணியும் அப்படித்தான் நினைத்தது. அதனாலேயே அரை இறுதிப் போட்டியை விட அதற்கு அடுத்து நடக்கவுள்ள இறுதிப் போட்டியை எதிர்கொள்வது பற்றி அந்த அணி திட்டமிடத் தொடங்கியது.

ஆனால் தாங்கள் அரை இறுதிப் போட்டிவரை முன்னேறியதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல என்பதை இந்திய அணி மீண்டும் மைதானத்தில் நிரூபித்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக மிகச்சிறப்பான ஆட்டத்தை அது வெளிப்படுத்தியது. அரை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை 60 ஓவர்களில் 213 ரன்களில் சுருட்டியது இந்தியா.

இப்போட்டியில் கபில்தேவ் 3 விக்கெட்களையும், ரோஜர் பின்னி, மொகீந்தர் அமர்நாத் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி 54.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக யஷ்பால் சர்மா 61 ரன்களையும், சந்தீப் பாட்டீல் 51 ரன்களையும் குவித்தனர்.

அடுத்தது இறுதிப் போட்டி. இதில் முதலில் ஆடிய இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் காந்த் மட்டுமே ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 38 ரன்களைக் குவித்தார்.

குறைந்த ரன்களை எடுத்ததால் மனமுடைந்து போனார்கள் இந்திய வீரர்கள். அப்போது அவர்களிடம் பேசிய கபில்தேவ், “நாம் இத்தனை தூரம் வருவோம் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் வந்துவிட்டோம். எனவே எதற்கும் துணிந்து களத்தில் இறங்குவோம். மைதானத்தில் பந்து நம்மைத் தேடி வரும் முன் நாம் பந்தை துரத்திப் பிடிப்போம். இப்படிச் செய்தால் நாம் கண்டிப்பாக ஜெயிக்கலாம்” என்றார்.

கபில்தேவின் இந்த உணர்ச்சி உரை இந்திய வீரர்களுக்கு புத்துணர்வை கொடுத்தது. மைதானத்தில் ஒவ்வொரு வீரரும் 10 வீரர்களுக்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தினர். இதனால் எளிதில் வெற்றி பெறலாம் என்ற நினைப்புடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல, உலகமே நம்மை அண்ணாந்து பார்த்தது. பி.எம்.சுதிர்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x