Published : 27 Jan 2020 10:03 AM
Last Updated : 27 Jan 2020 10:03 AM

ஜனவரி 29: இந்தியாவின் முதல் செய்தித்தாள்

ஜனவரி 28: லாலா லஜபதி ராய் பிறந்தார்

காந்தியின் வருகைக்கு முன்பு இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்களில் முக்கியமான மூன்று தலைவர்கள் லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் மற்றும் விபின் சந்திர பால். இம்மூவருக்கும் இணையான முக்கியத்துவம் இருந்ததைக் குறிக்கும் வகையில் அவர்கள் லால்-பால்-பால் என்றே குறிக்கப்பட்டனர். இவர்களில் ஒரு வரான லாலா லஜபதி ராய் 1865 ஜனவரி 28
அன்று இன்றைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தார்.

சட்டம் பயின்றவரான லஜபதி ராய் வழக்கறிஞராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். இள வயதிலேயே இந்து மத வாழ்க்கைமுறை மீது பெரும் நாட்டமும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடும் கொண்டிருந்தார். சுவாமி தயானந்த சரஸ்வதியின் மதச் சீர்த்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு ஆரிய சமாஜத்தில் உறுப்பினரானார். பிறகு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்.

பஞ்சாபில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக பிரிட்டிஷ் அரசு அவரை பர்மாவுக்கு நாடுகடத்தியது. அரசுக்கு எதிராகச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லாததால் தாய்நாடு திரும்ப அனுமதித்தது. 1920-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். 1928 அக்டோபர் 30 அன்று சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வருகை தந்தபோது எதிர்த்து அமைதி வழியில் போராட்டங்களை முன்
னெடுத்தார்.

ஜனவரி 29: இந்தியாவின் முதல் செய்தித்தாள்

இந்தியாவில் முதல் செய்தித்தாள் வெளியாகி 230 ஆண்டுகள் ஆகின்றன. ‘ஹிக்கிஸ் பெங்கால் கஸெட்’ (Hickey’s Bengal Gazette) என்றழைக்கப்பட்ட அந்த நாளிதழின் முதல் பிரதி 1780 ஜனவரி 29 அன்று வெளியானது. இந்த நாளிதழ் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது.

கல்கத்தா ஜெனரல் அட்வர்டைஸர் (Calcutta General Advertiser) அயர்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவரால் தொடங்கப்பட்டது. அன்றைய ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் வாரன் ஹாஸ்டிங்க்ஸின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சிக்கும் நாளிதழாகச் செயல்பட்டது.

அதனால் இந்தியாவில் கருத்து சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் வலியுறுத்திய முன்னோடியாகவும் கருதப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் வெளியான ஹிக்கிஸ் இதழ்கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டு நிறுத்தப்பட்டது.

ஜனவரி 30: சி.சுப்பிரமணியம் பிறந்த நாள்

இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான சி.சுப்பிரமணியம் 1910 ஜனவரி 30 அன்று பொள்ளாச்சியில் பிறந்தார். சென்னை அரசுக் கல்லூரியில் இயற்பியல் பட்டம். பிறகு சட்டத்திலும் பட்டம் பெற்றார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். காந்தியின் சட்ட மறுப்பு இயக்கத்தில் இணைந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது சிறை சென்றார். அரசியல் சாசன அவையின் உறுப்பினராகி அரசியல் சாசன உருவாக்கத்தில் பங்காற்றினார். சுதந்திர இந்தியாவில் மெட்ராஸ் மாநிலத்தில் ராஜாஜி, காமராஜர் தலைமையிலான அமைச்சரவைகளில் கல்வி, சட்டம், நிதி அமைச்சராக பணியாற்றினார். 1962-ல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உணவு மற்றும் வேளாண்மைக்கான மத்திய அமைச்சரானார். திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும் செயல்பட்டார். வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பி.சிவராமன் ஆகியோருடன் இணைந்து இந்தியாவின் நவீன விவசாயக் கொள்கையை உருவாக்கினார். 1979-ல் சரண் சிங் தலைமையிலான ஜனதா அரசில் பாதுகாப்பு அமைச்சராகச் செயல்பட்ட சுப்பிரமணியம் மகாராஷ்டிர ஆளுநராகவும் இருந்துள்ளார். 1998-ல் பாரத ரத்னா விருதைப் பெற்றார்.

ஜனவரி 31: க.நா.சு. பிறந்த நாள்

க.நா.சு என்று அழைக்கப்படும் எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியன் 1912 ஜனவரி 31 அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமானில் பிறந்தார். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு என எழுதிய நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடி. இலக்கியம், கலை, அவை குறித்த தீவிரமான விமர்சனம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சிற்றிதழ்களை தொடங்கினார்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை பெற்றிருந்த க.நா.சு. தமிழின் முக்கியமான கதைகளை ஆங்கிலத்திலும் நோபல் பரிசு பெற்ற ஆங்கில நாவல்களையும் இன்னும் பல ஆங்கிலக் கதைகளையும் தமிழிலும் மொழிபெயர்த்தவர். க.நா.சுவின் முதல் நாவல் ‘பசி’. ‘பொய்த்தேவு’ என்ற நாவல் மிகவும் புகழ்பெற்றது. ‘இலக்கியத்திற்கு ஒரு இயக்கம்’ என்ற இலக்கிய விமர்சனக் கட்டுரை நூலுக்காக 1986-ல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.

- தொகுப்பு: கோபால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x