Published : 24 Jan 2020 11:58 AM
Last Updated : 24 Jan 2020 11:58 AM

அறம் செய்யப் பழகு 10: குடும்பத்தில் இருந்து தொடங்கட்டும்

பிரியசகி

பாலின சமத்துவம் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தனர் தனராஜ் குடும்பத்தினர்.

கீர்த்தி: குடும்பத்தில் ஆண்களும்பெண்களும் வேலைகளை சரிசமமா பகிர்ந்துக்குறதுக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவதுக்கும் என்ன தாத்தா சம்மந்தம்?

தன்ராஜ்: நிறைய குடும்பங்களில் பெருக்குவது, சமைப்பது, துவைப்பது எல்லாம் பெண்களுக்கான வேலை, ஆண்கள் இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு சொல்லியே குழந்தைகளை வளர்ப்பாங்க. அந்த குடும்பங்களில் ஆணாதிக்கம் அதிகமா இருக்கும். பெண்களுக்கான மரியாதை அங்க ரொம்பக் குறைவா இருக்கும்.

எந்த வேலையையும் யாரும் செய்யலாம் எனும் போது ஆண் உயர்வு, பெண் மட்டம் என்ற எண்ணம் தோன்றாமல் எல்லோரும் சரிசமம் என்ற எண்ணம் உருவாகும். இந்த மாற்றம் குடும்பத்திலிருந்து தொடங்கினால்தான் சமுதாயமும் மாறும்.

ராணி: எங்க குடும்பத்திலேயே முக்கியமான முடிவெல்லாம் அப்பாதான் எடுப்பாங்க. வீட்ல நான், அம்மா, அக்கா எல்லோரும் உட்காந்துட்டு இருக்கும் போதுஅப்பா, பெரியப்பா வந்தா எழுந்து உள்ளேபோயிடுவோம். ஆம்பளைங்க பேசும் போது பெண்கள் குறுக்க பேசினா திட்டுவாங்க. மூணு பசங்க இருந்தாலும் கறி, முட்டை எல்லாம் தம்பிக்குதான் அதிகம் வைப்பாங்க. வீட்டு வேலைல அம்மாவுக்கு உதவி செய்யுறது நானும் அக்காவும்தான்.

தம்பிய கடைக்கு அனுப்புவாங்க. நானோ. அக்காவோ வெளிய போகணும்னா ஆம்பளப்புள்ளைய துணைக்கு கூட்டிட்டுப் போன்னு தம்பிய அனுப்புவாங்க. அவன் யாரோடையாவது சண்டை போட்டு அழுதுக்கிட்டு வந்தா, ஏண்டா பொம்பள மாதிரி அழுகுற; ஆம்பளையா லட்சணமா இருன்னு அம்மா சொல்வாங்க.

எங்க பாட்டி இன்னும் ஒருபடி மேல போய் "ஏண்டா உன்ன ஏசுனவன ரெண்டு அடி போடாம பொட்டச்சியாட்டும் கண்ணகசக்கிட்டுவர்றன்னு” உசுப்பேத்திவிடுவாங்க. அப்படி அவன் போய் திருப்பிஅடிச்சிட்டு வந்துட்டான்னா, இப்பதாண்டா ஆம்பள சிங்கம்னு திருஷ்டி சுத்தி போடுவாங்க. இப்படியே அவன உசுப்பேத்தி இப்ப எதுக்கெடுத்தாலும் பொண்டாட்டி, குழந்தைகள அடிக்குற அளவு ரொம்ப மொரடனா ஆகிட்டான்.

கீர்த்தி: அநியாயமா இருக்கே!

சுகாகர்: அப்பா எப்படிபட்டவர்ம்மா?

ராணி: நம்ம ஊர்ல பெண்களுக்கு கல்யாணம் ஒரு பெரிய திருப்புமுனை அந்த விதத்துல நான் ரொம்ப லக்கி. பிளஸ் 2-க்கு மேல எங்க ஊர்ல காலேஜ்இல்லாததால் பக்கத்து ஊருக்கு அனுப்பி படிக்க வைக்க மாட்டேன்னுட்டாங்க. பொண்ணுங்க ரொம்ப படிச்சா திமிர்அதிகமாகிடும், மாப்பிள்ளை கிடைக்காதுன்னு நிறைய காரணங்கள் சொன்னாங்க. நான் அழுது, அடம் பிடிச்சு.ரெண்டு நாள் பட்டினி கிடந்துதான் எங்கப்பாவ சம்மதிக்க வைச்சேன். ஆனா நல்ல வரன் வந்தா கட்டிக்குடுத்துடுவேன்னு எங்கப்பா கண்டிஷன் போட்டார்.

காலேஜ் ரெண்டாவது வருஷம் படிக்கும்போதே உங்கப்பாவுக்கு பெண் கேட்டு வந்தாங்க. நான் தொடர்ந்து படிக்க விரும்புவதை எங்கப்பா தயக்கத்தோட சொன்னதும் அதுக்கென்ன நல்லா படிக்கட்டும், விரும்புனா வேலைக்கும் போகட்டும்னு சொன்னதும் எனக்கு சந்தோஷம் தாங்கல. கல்யாணத்துக்கப்புறம் பி.ஏ., பி.எட்., எம்,ஏ. எல்லாம் படிச்சேன். டீச்சர் வேலையும் பார்ககுறேன். ஆனா எங்கக்காவுக்கு படிக்கணும்னு ஆசை இருந்தாலும் அப்பாகிட்ட சொல்ல பயந்துகிட்டு கம்முனு இருந்ததால பன்னிரெண்டாவதோட படிப்ப நிறுத்தி கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க.

சுதாகர்: பாவம்மா பெரியம்மா. உங்களுக்கு இருந்த தைரியம் அவங்களுக்கு இல்லாமப் போச்சே.

கீர்த்தி: தாத்தா, நீங்கதான் பசங்கள சூப்பரா வளர்த்திருக்கீங்க.

தன்ராஜ்: நான் புதுசா எதுவும் பண்ணலைப்பா. நம் முன்னோர்கள் காலத்துல தாய் வழிச்சமூகமாதானே வாழ்ந்தாங்க, அதுதான் சரியானதும்கூட.

சுதாகர்: தாய் வழிச் சமூகம்னா என்ன தாத்தா?

(தொடரும்)
கட்டுரையாளர்: ஆசிரியை, எழுத்தாளர், நிறைவகம், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x