Published : 24 Jan 2020 10:36 AM
Last Updated : 24 Jan 2020 10:36 AM

பாகிஸ்தான், சீனாவில் குடியேறியவர்கள் விட்டுச்சென்ற எதிரி சொத்துகள்: விற்பனையை கண்காணிக்க மத்திய அமைச்சர்கள் குழு

எதிரி சொத்துகள் என்று கண்டறியப் பட்ட 9,400 பேருக்கு சொந்தமான சொத்துகள் விற்பனையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு கண்காணிக்க உள்ளது.

இந்த சொத்துகளை விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு ரூ. ஒரு லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிரி சொத்துகள் என்பது, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, அந்நாட்டுக்கு புலம்பெயர்ந்தவர்கள், 1962-ம்ஆண்டு இந்தோ-சீனா போருக்குப் பிறகு சீனாவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு சொந்தமான இந்தியாவில் இருக்கும் சொத்துகளேயாகும்.

அவ்வாறாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்றவர்களின் 9,280சொத்துகளும், சீனா சென்றவர்களின்129 சொத்துகளும் கண்டறியப்பட்டுள் ளன. பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் விட்டுச் சென்ற 9,280 சொத்துகளில் 4,991 உத்தரபிரதேசத்திலும், 2,735மேற்கு வங்கத்திலும், 487 டெல்லியிலும் உள்ளன. சீனாவுக்கு சென்றவர்களின் 126 சொத்துகளில் 57 மேகாலயாவிலும் 29 மேற்கு வங்கத்திலும் 7 அசாமிலும் உள்ளன.

சட்டத் திருத்தம்

இவற்றை விற்பனை செய்து, வருவாய் ஈட்டுவதற்காக ‘எதிரி சொத்துகள் சட்டத்தில்’ மத்திய அரசு கடந்த 2018-ம்ஆண்டு சில திருத்தங்களை கொண்டுவந்தது. இந்த சொத்துகளை விற்பனைசெய்வதன் மூலம் அரசுக்கு ரூ.1 லட்சம்கோடி கிடைக்கும் என அப்போதைய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் தெரிவித்தார்.

இந்நிலையில் எதிரி சொத்துகள் விற்பனையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிரி சொத்துகள் காப்பாளர் மூலம் தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில் இருக்கும் அசையா சொத்துகள் விற்பனைக்காக கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் தலைமையில் இரு உயர்நிலை குழுக்கள் அமைத்து உத்தரவிட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x