Published : 24 Jan 2020 08:45 AM
Last Updated : 24 Jan 2020 08:45 AM
அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதியம் நிர்ணயிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்ட அரசாணை விவரம்: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் அறிவுறுத்தலை ஏற்று 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசுமற்றும் அரசு உதவி பொறியி யல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்படுகிறது.
நேரடி நியமன உதவிப் பேராசிரியர்களுக்கு ஆரம்ப ஊதியம் ரூ.57,700, பதவி உயர்வு மூலம் மூத்த உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுபவருக்கு ரூ.68,900, கிரேடு உதவி பேராசிரியர்களுக்கு ரூ.79,800 ஊதியமாக நிர்ணயிக்கப்படுகிறது.
இதுதவிர நேரடியாக தேர்வாகும் இணை பேராசிரியர்களுக்கு ரூ.1,31,400, பேராசிரியர்களுக்கு ரூ.1,44,200, பதவி உயர்வு பெறும் மூத்த பேராசிரியர்களுக்கு ரூ.1,82,200, முதல்வர் மற்றும் இயக்குநர்களுக்கு ரூ.1,44,200ஆரம்பஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய வயதில் மாற்றமில்லை
பணியாளருக்கான ஓய்வு வயதில் எந்த மாற்றமும் இல்லை.மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், விபத்துக் காப்பீடு, விடுப்பு உட்பட அனைத்தும் மாநில அரசின் விதிகளின்படி வழங்கப்படும்.
உதவிப் பேராசிரியர்கள் வாரத்துக்கு 16 மணி நேரமும், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் வாரத்துக்கு 14 மணிநேரமும், முதல்வர், இயக்குநர்கள் வாரத்துக்கு 6 மணி நேரமும் பணிபுரிய வேண்டும். பணிக்காலத்தில் பேராசிரியர்கள் ஆராய்ச்சிப் படிப்பை முடித்தால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும்.
அதேநேரத்தில் வேறு தொழில்நுட்ப படிப்புகளை பகுதிநேரமாக படித்தால் ஊக்க ஊதியம் வழங்கப்படாது. பேராசிரியர்கள் அல்லது பணியாளர்களை தேர்வு செய்யும்போது ஏஐசிடிஇ மற்றும் யுஜிசி விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT