Published : 23 Jan 2020 03:08 PM
Last Updated : 23 Jan 2020 03:08 PM
'என் அப்பா' என்ற தலைப்பில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவன் எழுதிய உருக்கமான கட்டுரையைப் பார்த்த அமைச்சர் உடனடியாக உதவி செய்துள்ளார்.
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் மங்கேஷ். அங்குள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அண்மையில் சிறுவனின் வகுப்பு ஆசிரியர் நஜ்மா ஷேக், என்னுடைய அப்பா என்ற தலைப்பில், கட்டுரை ஒன்றை எழுதச் சொன்னார்.
சிறுவன் மங்கேஷும் எழுதினான். அதில், ''என் பெயர் மங்கேஷ். அப்பா பரமேஸ்வர், காசநோயால் சமீபத்தில் இறந்துவிட்டார். அவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தபோது எனக்கான உணவு வாங்கி வருவார். பேனா வாங்கிக் கொடுப்பார். என்னை மிகவும் நேசித்தார். நானும் என் தந்தையை நேசித்தேன். அவர் கடந்த டிசம்பர் 18-ம் தேதி இறந்துவிட்டார். அன்று நானும் அம்மாவும் மிகவும் அழுதோம். ஏராளமான உறவினர்கள் அன்று வீட்டுக்கு வந்திருந்தனர்.
நீ படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்று அப்பா அடிக்கடி கூறுவார். அவர் இப்போது இல்லை. அப்பா உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறேன். நானும் அம்மாவும் வீட்டில் பயத்துடனேயே வாழ்கிறோம். மாற்றுத் திறனாளியான அம்மாவால் எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. கஷ்டமாக இருக்கிறது. அப்பா, திரும்ப வந்துவிடுங்கள்'' என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்த ஆசிரியர் நஜ்மா ஷேக், நெகிழ்ச்சியடைந்து கட்டுரையைப் புகைப்படம் எடுத்தார். வாட்ஸ் அப் குழுக்களில் அதை அனுப்பி, சிறுவனுக்காக உதவி கோரினார். அதைப் பார்த்த சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்செய் முண்டே, சிறுவனுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளார்.
சமூக நலத்துறை உதவியுடன், மங்கேஷின் தாய்க்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை, சுய தொழில் செய்வதற்கான நிதி உதவி ஆகியவை அளிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT