Published : 23 Jan 2020 12:13 PM
Last Updated : 23 Jan 2020 12:13 PM

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது; என்ன காரணம்?

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்துள்ளது.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது. 12-ம் வகுப்பை முடித்தவர்களும் 2020-ல் 12-வது வகுப்புத் தேர்வை எழுத உள்ளவர்களும் நீட் தேர்வை எழுதலாம்.

கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கிய விண்ணப்பத் தேதி, ஜனவரி 1-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை தமிழக அளவில் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 1 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். சற்றேறக்குறைய 17 சதவீதம் இதில் குறைந்துள்ளது.

இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் முதன்மைக் காரணங்கள் சில உள்ளன. ஆண்டாண்டுக்கு நீட் கட் ஆஃப் விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவது கடினமாக உள்ளது.

அடுத்த காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முறையாக நீட் பயிற்சி ழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் 412 மையங்களில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து நீட் பயிற்சியை பள்ளிக் கல்வித்துறை அளிக்கிறது. உள்ளாட்சித் தேர்தல், தொடர் விடுமுறை, செய்முறைத் தேர்வு, பொதுத் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பயிற்சிக்கான கால அளவு குறைந்துள்ளது. இதனால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

அதேபோல கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 70% பேர், ஏற்கெனவே நீட் தேர்வு எழுதிக் கிடைக்காமல் இரண்டாவது, மூன்றாவது முறையாக முயன்றவர்கள். இதனால் போட்டி அதிகம் என்ற நோக்கில், மருத்துவத்துக்கு இணையான மற்ற படிப்புகளைத் தமிழக மாணவர்கள் நாடிச்செல்வதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x