Published : 22 Jan 2020 04:30 PM
Last Updated : 22 Jan 2020 04:30 PM

தேர்வில் கால்குலேட்டர்: சிறப்பு உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மட்டும் சிபிஎஸ்இ அனுமதி

சிறப்பு உதவித் தேவைப்படும் குழந்தைகளுக்கு மட்டும் தேர்வின் போது கால்குலேட்டரைப் பயன்படுத்திக் கொள்ள சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் அனைத்துப் பள்ளிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

''சிறப்பு உதவித் தேவைப்படும் குழந்தைகள் (CSWN) தங்களின் 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளின்போது அடிப்படை கால்குலேட்டரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2020 தேர்வுக்காக சிஎஸ்டபிள்யுஎன் பிரிவின் கீழ், பதிவு செய்த மாணவர்கள் மட்டும் கால்குலேட்டரைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர். முறையான சான்றிதழ் இல்லாமல், தேர்வின் போது கால்குலேட்டரைப் பயன்படுத்த விரும்பும் மாணவர்களுக்கு அனுமதி கிடையாது''.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மாணவர்கள், ஜனவரி 28-ம் தேதிக்குள் பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும். கோரிக்கையைப் பள்ளி முதல்வர்கள் சம்பந்தப்பட்ட சிபிஎஸ்இ அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

கடந்த 2018-ம் ஆண்டு, சிறப்பு மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வுகளின்போது கணிப்பொறி அல்லது மடிக்கணினிகளைப் பயன்படுத்திக் கொள்ள சிபிஎஸ்இ அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x