Published : 22 Jan 2020 04:04 PM
Last Updated : 22 Jan 2020 04:04 PM
புதுச்சேரி மாணவர், கொள்ளையர்களிடமிருந்து ரஷ்யரைக் காத்த சிறுவன், இளம் பியானோ கலைஞர் உள்ளிட்ட 49 சிறுவர்களுக்கு பால் சக்தி புரஸ்கார் விருது இன்று டெல்லியில் வழங்கப்பட்டது.
5 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு விருதுகளை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராஷ்டிரபதி பவனில் இன்று வழங்கினார்.
கண்டுபிடிப்புகள், சமூக சேவை, புலமை, விளையாட்டு, கலை, கலாச்சாரம் மற்றும் தைரியமான செயல்களுக்காக பால் சக்தி புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. பதக்கம், ரூ.1 லட்சம் ரொக்கம், சான்றிதழ் ஆகியவை இந்த விருதில் அடக்கம்.
கொள்ளையர்களிடமிருந்து ரஷ்யரைக் காத்த சிறுவன் இஷான் சர்மா, இளம் பியானோ கலைஞர் கெளரி மிஸ்ரா, புதுச்சேரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் வெங்கட சுப்ரமணியன் உள்ளிட்ட 49 சிறுவர்களுக்கு பால் சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி, நெல்லித்தோப்பைச் சேர்ந்த வெங்கட சுப்ரமணியன் ஜிப்மர் கேந்திரிய வித்யாலயாவில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இடது கை குறைபாட்டுடன் பிறந்தாலும், வெங்கட சுப்பிரமணியன் நம்பிக்கையைக் கைவிடவில்லை. தன்னம்பிக்கையோடு படிப்பு, இசை, கராத்தே, சமூகப் பணி, விளையாட்டு, யோகா, சாரணியர் இயக்கப் பணி, பிறமொழிக் கற்றல் என பல துறைகளிலும் இவர் சிறப்பிடம் பெற்றுள்ளார். இதைப் பாராட்டி அவருக்கு பால் சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
வெங்கட சுப்ரமணியன் உள்ளிட்ட 49 சிறுவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT