Published : 22 Jan 2020 08:20 AM
Last Updated : 22 Jan 2020 08:20 AM

விரைவில் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்: கல்வி, வேலைவாய்ப்பில் உள்ள எதிர்பார்ப்புகள் பள்ளிக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமா?

வரும் பிப்ரவரி 1-ம் தேதி 2020-21ம்ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்தியஅரசு தாக்கல் செய்யவிருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் நாடாளுமன்றத்தில் இந்தஆண்டுக்கான பட்ஜெட்டை முன்வைப்பார்.

பட்ஜெட் என்றதும் வருமான வரி, ஜி.எஸ்.டி., என்றெல்லாம் சொல்வார்கள். அதற்கும் நமக்கும் தொடர்பில்லை என்று நினைத்துவிட வேண்டாம் மாணவர்களே. அன்றாடம் நாம் சாப்பிடும் உணவு பண்டங்களில் ஆரம்பித்து, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தீர்மானிப்பது ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்தான். அதிலும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய நிதி ஒதுக்கீடு கல்விக்கான பட்ஜெட்.

அந்த வகையில், கல்வி தொடர்பாக இந்த பட்ஜெட்டில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சிலவற்றை தெரிந்துகொள்வோம்:

தற்போதுவரை ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 3 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. ஏனென்றால் பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் 5 முதல் 7 சதவீதம் வரை அந்நாடுகளின் ஜிடிபியில் இருந்து கல்விக்கென நிதி ஒதுக்கப்படுகிறது. அதே நேரத்தில் கடந்த மூன்றாண்டுகளில் இந்தியப் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு சீராக அதிகரித்து வந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. 2017-18-ல் 46 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் (2019-20) ஒட்டுமொத்த கல்வித் துறைக்கு 94, 853 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ. 56, 536 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாகப் பள்ளி கல்விக்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 3000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது. வரும் ஆண்டில் கல்வி ஒதுக்கீட்டின் அளவு கணிசமாக உயர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் முதல், ஸ்மார்ட் வகுப்புகளை அதிகரித்தல், நவீன ஆய்வுக்கூடங்களை கட்டமைத்தல், ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துதல், நூலகங்களை செம்மைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்த முடியும்.

அடுத்தபடியாக, கல்விக் கடன்பெறுவது மிகக் கடினமாக மாறியுள்ளது. இதில் நெகிழ்வுத்தன்மை அமல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல வேலையில்லா திண்டாட்டம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்திருப்பதால் தொழிற்துறைகளுடன் இணைந்து புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டங்களும் அதற்குரிய நிதி ஒதுகீடும் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் நாட்டின் 130 கோடி இந்தியர்களின் கனவை முன்னிறுத்தும் திட்டமாகும்.

இது தொடர்பாக பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி கடந்த ஜனவரி 20-ம் தேதி வரை MyGov.in இணையதளத்தில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் தங்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பதிவிட்டனர். அவர்களுடைய கருத்துகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பட்ஜெட் 2020-ல்கல்வித் துறைக்கு குறிப்பாக பள்ளிக்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x