Published : 22 Jan 2020 07:56 AM
Last Updated : 22 Jan 2020 07:56 AM

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு இன்று முதல் பிப்.12-ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து செப்டம்பரில் நடந்த தேர்வில்1 லட்சத்து 33 ஆயிரத்து 568 பேர்தேர்வு எழுதினர். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டின்போது முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இறுதியில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கடந்த ஆண்டு நவ.27-ம் தேதி 1,060பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியானது. இதையடுத்து, தற்போது அதற்கான விண்ணப்பம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டுநவ.27-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. இப்பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பத்தை ஜன.22 (இன்று) முதல் பதிவேற்றம் செய்யலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு வரும் பிப்.12-ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால், எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x