Published : 21 Jan 2020 10:13 AM
Last Updated : 21 Jan 2020 10:13 AM
தேர்தல் நிதி பத்திரம் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் இன்னும் 2 வாரத்துக்குள் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தனி நபரோ அல்லது நிறுவனங்களோ ரொக்கமாகவோ அல்லது காசோலையாகவோ நன்கொடை வழங்குவதற்கு பதிலாக தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது.
அதன்படி, அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) மூலம் நன்கொடைக்கு ஏற்ப தேர்தல் நிதி பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தலாம். ஆனால், தங்களுக்கு யார் நன்கொடை வழங்கினார்கள் என்று அரசியல் கட்சிகளுக்கு தெரியாது. இதனால், இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல தனியார் தொண்டு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ‘‘தேர்தல் நிதி பத்திரத்திட்டம் மூலம் கணக்கில் வராத கறுப்புபணம் ஆளும் கட்சிக்கு அனுப்பப்படுகிறது. எனவே இந்த திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, திட்டத்துக்கு இடைக்கால தடைவிதிக்க மறுப்புதெரிவித்தது. மேலும், நிதி பத்திரம் திட்டம் குறித்து மத்திய அரசு மற்றும் தலைமை தேர்தல் ஆணையம் இன்னும் 2 வாரத்துக்குள் பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT