Published : 21 Jan 2020 09:41 AM
Last Updated : 21 Jan 2020 09:41 AM

தனி நபர் திறன் குத்து சண்டை போட்டியில் தங்கம் வென்ற சேலம் மாணவர்கள்: சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்

திருச்சியில், ‘ஜெட்லி புக் ஆஃப் வேர்ல்டு ரிகார்டு’ சார்பில் நடந்த தனி நபர் திறன் குத்து சண்டை போட்டியில் சேலத்தைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவர் மற்றும் 4-ம் வகுப்பு மாணவி ஆகியோர் தங்கம் வென்று சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். டீ கடை நடத்தி வருகிறார். இவரது மகன் எஸ்.ஆகாஷ் (6). இவர் நான்கு ரோட்டில் உள்ள சிறுமலர் மெட்ரிக் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஓராண்டாக குத்துசண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், திருச்சியில், ‘ஜெட்லி புக் ஆஃப் வேர்ல்டு ரிகார்டு’ புத்தகத்தில் சாதனை படைப்பவர்களுக்கான போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில். ஆகாஷ் கலந்து கொண்டு, ஒரு நிமிடத்தில் ‘ஃப்ரீ ஸ்டைல் ஏர் பாக்ஸிங் போட்டியில் 240 குத்துக்களை விட்டு, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து, தங்க பதக்கம், கேடயம், சான்றிதழை பெற்றார்.

இதேபோல, சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த ஜெகநாதன், மேனகா தம்பதி மகள் ஹர்ஷினி (10). இவர் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 3 நிமிடத்தில் ஃப்ரீ ஸ்டைல் ஏர் பாக்ஸிங்கில் 685 குத்துக்களை விட்டு, தங்கம் வென்று ஜெட்லி புக் ஆஃப் வேர்ல்டு ரிகார்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இதுகுறித்து துரோணா பாக்ஸிங் அகாடமி தலைவர் அருள்முருகன் கூறும்போது, “இளம் வயதில் சாதனை படைப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக தனி நபர் திறன் போட்டியை ‘ஜெட்லி புக் ஆஃப் வேர்ல்டு ரிகார்டு’ நடத்தியது. இதில், சேலத்தை சேர்ந்த ஆகாஷ், ஹர்ஷினி ஆகியோர் சாதனை படைத்துள்ளனர். இது அவர்களின் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x