Published : 21 Jan 2020 08:18 AM
Last Updated : 21 Jan 2020 08:18 AM
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 43-வது புத்தகக் கண்காட்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்தக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்தக் கண்காட்சியில் 800-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை உற்சாகமாக வாங்கிச் சென்றுள்ளனர். புத்தக விற்பனையும் ரூ.15 கோடியை தாண்டி உள்ளது.
இன்றுடன் புத்தகக் கண்காட்சி நிறைவு பெறுவதால், மக்கள் வருகையும் புத்தக விற்பனையும் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணை சோதனை
விசாகப்பட்டினம்
அணுஆயுதங்களை சுமந்து சென்று இலக்குகளைத் தாக்கி அழிக்கும் கே-4 அதிநவீன ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
ஆந்திர மாநில கடல் பகுதியில் கே-4 ஏவுகணை சோதனை நேற்று நடைபெற்றது. இந்த ஏவுகணை 3,500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீருக்கு அடியில் இருந்து இலக்கை நோக்கி செலுத்தப்பட்டது. சோதனையின் போது மிக துல்லியமாக இலக்கை தாக்கி அழித்தது ஏவுகணை என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனை தற்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின் நீர்மூழ்கிக் கப்பலில் இந்த ஏவுகணை பொருத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT