Published : 20 Jan 2020 01:20 PM
Last Updated : 20 Jan 2020 01:20 PM
மாற்றுத் திறனாளி ஆய்வு மாணவர்களுக்கான மத்திய அரசின் உதவித் தொகைத் திட்டத்தை யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி மாதம் 29-ம் தேதி கடைசி நாளாகும்.
பல்கலைக்கழக மானியக் குழு மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு பல்வேறு திட்டங்களின் கீழ், நிதியுதவி மற்றும் கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், மாற்றுத் திறனாளி ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித்தொகை குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதன்படி, முதுநிலைப் படிப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் எம்ஃபில், பிஎச்டி, ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது.
உதவித் தொகைக்குத் தேர்வு செய்யப்படும் எம்ஃபில் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 25,000 உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் இதர செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ. 10,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும்.
பி.எச்.டி. படிப்பை மேற்கொள்ளும் மாணவா்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இவா்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.25,000 உதவித் தொகையும், இதர செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரையும் உதவித் தொகை வழங்கப்படும். மூன்றாம் ஆண்டில் மாதம் ரூ.28,000 உதவித் தொகையும், ஆண்டுக்கு ரூ. 20,500 முதல் ரூ.25,000 வரையும் உதவித் தொகையும் வழங்கப்படும்.
உதவி தேவைப்படும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் www.ugc.ac.in/ugc schemes என்ற இணைய முகவரி மூலம் பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT