Published : 20 Jan 2020 01:03 PM
Last Updated : 20 Jan 2020 01:03 PM

நதிகள் பிறந்தது நமக்காக! 11: தனம் தரும் தண்ணீர்!

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் அற்புத பிரதேசங்கள். காடுகள், மலைகள், ஆறுகள் நிரம்பிக் கிடக்கும் இந்த மண்டலத்தின் பிரதானமான ஆறுகளில் ஒன்று ‘தன்ஸ்ரீ' (அ) ‘தன்சிரி'.

நாகாலாந்து திம்மபூர் மாவட்டத்தில் இருந்து அசாம் கோலாகாட் மாவட்டம் வரை தன்சிரி பாய்கிறது. நாகாலாந்தில் உள்ள நாகா குன்றுகளின் தென் மேற்கு மூலையில், ‘பரைல்’ (Barail) பிரதேசத்தில் ‘லைசங்’ முகட்டில் (Laisang peak) சுமார் 1900 மீட்டர் உயரத்தில் இந்த ஆறு தோன்றுகிறது.

எல்லை கோடு போன்ற ஆறு

இங்கு ‘வடிதிசா' (Watidisa) என்ற ஆறு மிகப் பிரபலம். காரணம், ‘கார்பி அங்க்லாங்’ (Karbi Anglong), வடக்கு ‘கச்சார் குன்றுகள்’ (North Cachar Hills) மற்றும் நாகாலாந்து மாநிலம் ஆகிய மூன்றும் இந்தப் புள்ளியில் இணைகின்றன. இங்குதான் தன்சிரி ஆறு நுழைகிறது. தெற்கில் இருந்து வடக்காக சுமார் 350 கி.மீ. பாய்ந்து, பிரம்மபுத்ரா நதியின் தெற்குக் கரையில் அதனுடன் இணைகிறது. இதன் பாசனப் பகுதி - 1220 ச.கி.மீ. ஆகும்.

முதல் 37 கி மீக்கு வடக்கு - மேற்கு திசையில் பாயும் இந்த ஆறு, வடக்கு - கிழக்காக திசை மாறி, சுமார் 76 கி மீ பாய்ந்து, திம்மாபுர் அடைகிறது. அங்கிருந்து, கோலாகாட் (Golaghat) வரையில், வடக்கு நோக்கியே ஓடுகிறது. ‘கர்பி அங்க்லாங்’ (Karbi Anglong) மற்றும் நாகாலாந்து இடையே எல்லைக் கோடு போல் ஓடும் இந்த ஆறு, ஏராளமான வன விலங்குகளுக்குத் தாகம் தீர்க்கும் புகலிடம் ஆகவும் விளங்குகிறது.

வற்றாத நீர்நிலைகள்

நதியின் ஒரு பக்கத்தில் ‘தன்சிரி வனக்காப்பகம்’ (Dhansiri Reserved Forest);

மறு பக்கத்தில் ‘இன்டான்கி தேசியப் பூங்கா’ (Intanki National Park) உள்ளன.

‘இன்டான்கி’ காட்டுப் பகுதியில் உயர்ந்த மரங்கள் அடர்ந்து இருக்கின்றன.

தன்சிரி, கபிலி - இரண்டுமாக, ‘மிகிர் குன்றுகள்’ பகுதியை (Mikir hills) தீபகற்பப் பகுதியில் இருந்து பிரிக்கின்றன. இந்த ஆறு நெடுகிலும், வற்றாத நீர் நிலைகள் ஏராளமாய் இருக்கின்றன. இவை தன்சிரி நதியை வலுப்படுத்துகின்றன. ‘அஹோம் புரான்ஜிஸ்’ (Ahom Buranjis) எனும் பண்டைய இலக்கியத்தில் இந்த நதி - ‘நீர் நிலைகளிலிருந்து வரும் நதி’ எனும் பொருளில், ‘கே-நம்-தி-மா’ (Khe-Nam-Ti-Ma) எனப்படுகிறது. (Khe - ஆறு, Nam = தண்ணீர், Ti = இடம், Ma = வருகை)

வடகிழக்கு மாநிலங்களின் இயற்கை அழகை ரசிப்பதற்கு ஆற்றங்கரைகள்தாம் மிகச் சரியான இடம். இதற்கு ஏற்றாற் போல், நாகாலாந்து, திமாபுர் அருகே, தன்சிரி ஆற்றின் கரையில் நீர்ப் போக்குவரத்து வசதி இருக்கிறது. ‘போகாஜன்’ (Bokajan) வரை சிறிய அளவிலான நாட்டுப் படகுகள் ஏராளமாக விடப்படுகின்றன. பயணித்து பார்க்கப் பரவசமாக இருக்கும். முயற்சித்துப் பார்ப்போமா?

(தொடர்வோம்)

கட்டுரையாளர்: ‘நாட்டுக்கொரு பாட்டு’,

‘பொருள்தனை போற்று’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x