Published : 20 Jan 2020 12:09 PM
Last Updated : 20 Jan 2020 12:09 PM

ஜன 24: பெண் குழந்தை நாள்

மாநிலங்கள் உருவான நாள்

ஜனவரி 21

இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள திரிபுரா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்கள் உருவான நாள் 1972 ஜனவரி 21. சுதந்திரத்துக்கு முன் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் பிரிட்டிஷின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளாகவும் மன்னர்களால் ஆளப்பட்ட சமஸ்தானங்களாகவும் மாகாணங்களாகவும் இருந்துவந்தன. சுதந்திரத்துக்குப் பிறகு பல்வேறு காலகட்டங்களில் இந்திய வரைபடத்தில் உள்ள எட்டு வடகிழக்கு மாநிலங்களும் உருவாகின. 1956-ல் திரிபுராவும் மணிப்பூரும் மத்திய ஆட்சிப் பகுதிகளாயின.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்தே அசாமின் ஒரு பகுதியாக இருந்து வந்த மேகாலயா தனி மாநிலம் கோரும் மக்கள் போராட்டங்கள் காரணமாக 1969 அசாம் மறுசீரமைப்பு சட்டத்தின்படி தன்னாட்சி அதிகாரம் பெற்றது. 1972-ல் திரிபுரா, மணிப்பூர், மேகாலயா மூன்றும் இந்திய ஒன்றியத்தின் தனி மாநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டன.

பைரன் பிறந்த நாள்

ஜனவரி 22

உலகின் தலைசிறந்த ஆங்கிலக் கவிஞர்களில் ஒருவரான ஜார்ஜ் பைரன் லண்டனில் 1788 ஜனவரி 22 அன்று பிறந்தார். 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவாகி வந்த ரொமாண்டிசிச கலை இயக்கத்தை முன்னெடுத்த படைப்பாளிகளில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். 18 வயதில் ‘ஃபூஜிடிவ் பீசஸ்’ (Fugitive Pieces) என்ற தனது முதல் கவிதையை வெளியிட்டார். அதற்கு எழுந்த கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ‘இங்க்லிஷ் பார்ட்ஸ் அண்ட் ஸ்காட்ச்ரெவ்யுவர்ஸ்’ என்ற படைப்பை வெளியிட்டார்.

போர்ச்சுகல், ஸ்பெய்ன், இத்தாலி, கிரீஸ் என்று ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்தார். துருக்கிப் பேரரசின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான கிரேக்க விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதனால் கிரேக்கத்தின் தேசிய நாயகனானார். ‘தி புரோபசி ஆஃப் டாண்டே ‘தி பிராஃபசி ஆஃப் டாண்டே’, ‘தி ட்ரீம்’, ‘ஹீப்ரூ மெலடீஸ்’ ஆகியவை இவரது முக்கியமான படைப்புகளில் சில. 1821-ல் வெளியான ‘சைல்ட் ஹாரோல்ட்’ச் பில்க் ரிமேஜ்’ இவரது சுயசரிதைக் கவிதையாகக் கருதப்படுகிறது.

ஐ.நா.வில் இந்தியரின் உரை

ஜனவரி 23

ஐ.நா. சபை வரலாற்றில் மிக நீண்ட உரையை ஆற்றியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஒரு இந்தியர். 1957 ஜனவரி 23, 24-ல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் உரையை ஆற்றத் தொடங்கினார் இந்தியத் தூதர் வி.கே.கிருஷ்ணன் மேனன்.

இரண்டு நாட்களில் மொத்தம் ஏழு மணி நேரம் 48 நிமிடங்களுக்கு இந்த உரை நீண்டது. ஐ.நா.வில் ஆற்றப்பட்ட மிக நீண்ட உரை என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. இவ்வளவு பெரிய உரையை ஆற்றிக்கொண்டிருந்த மேனன் உடல்நிலை மோசமடைந்து மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டு அதன் பிறகும் ஒருமணி நேரம் தனது உரையைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய பெண் குழந்தை நாள்

ஜனவரி 24

பெண் சிசுக் கொலைகளும் கருக்கலைப்புகளும் இன்றும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த அவலங்களைக் களையவும் பெண்களுக்குச் சமவாய்ப்புகளை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஜனவரி 24-ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் எல்லா வகையான பாகுபாடுகளையும் களைவது, பெண் குழந்தைகள் மனித உரிமைகள், சமூகத்தில் சமத்துவத்துடன் உரிய மரியாதையுடனும் நடத்தப்படுவது ஆகியவற்றை உறுதி செய்வது தேசிய பெண் குழந்தை நாளின் நோக்கங்களாகும்.

- தொகுப்பு: கோபால்தேசிய

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x