Published : 19 Jan 2020 08:19 AM
Last Updated : 19 Jan 2020 08:19 AM

ஊதிய கொடுப்பாணை வழங்குவதில் தாமதம்: 2 மாதங்களாக சம்பளமின்றி பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு

சென்னை

தமிழக பள்ளிக் கல்வியில் 2018-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் 95 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அந்தப் பள்ளிகளுக்கு தலா 9 பேர் வீதம் 855 பட்டதாரி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இதனால் மாதம்தோறும் ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

ஆனால், ஒவ்வொரு மாதமும்கொடுப்பாணை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘கடந்த நவம்பர், டிசம்பர் மாத சம்பளம் கிடைக்காததால் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15 நாட்களுக்கு பின்னரே ஊதியம் தரப்படுகிறது. இதனால் பல்வேறு செலவினங்களை சமாளிக்க முடியாமல் தவிக்கிறோம்.

இந்த மனஉளைச்சலால் கற்பித்தல் பணிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை. எனவே, குறைந்தபட்சம் ஓராண்டாவது தொடர் நீட்டிப்பாணை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘துறை இயக்குநரின் ஒப்புதலுக்காக கோப்புகள் கடந்த வாரம் அனுப்பப்பட்டுள்ளன. அவர் கையெழுத்திட்டு ஆணை பிறப்பித்த உடன் ஊதியம் வழங்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x