Published : 18 Jan 2020 01:19 PM
Last Updated : 18 Jan 2020 01:19 PM
ஒவ்வொரு தாலுக்காவிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயே டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் வழக்குத் தொடர்ந்தார். அதில், நாடு முழுவதும் அனைத்து வட்டங்களிலும் (தாலுக்கா) கே.வி. பள்ளிகள் அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், ''அது அரசின் கொள்கை முடிவு. நீதிமன்றம் அதில் தலையிட முடியாது'' என்று தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் மனு தொடர்ந்தார். அதில், ''கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் குறைவான கட்டணத்தால், ஏழை மாணவர்களும் தரமான கல்வியைப் பெற முடியும். போட்டிகள் நிறைந்த உலகில் சிறப்பாகச் செயலாற்ற முடியும்.
கே.வி.பள்ளிகள் இருந்தால், போட்டியை எதிர்கொள்ளும் அருகமைப் பள்ளிகள், சிறப்பான கல்வியை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் நாடு முழுவதும் அனைத்து வட்டங்களிலும் கே.வி.பள்ளிகளை அமைக்க வேண்டும். இந்தியாவில் 5,464 வட்டங்கள் உள்ள நிலையில், 1,209 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே உள்ளன'' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, ''எங்கு பள்ளி உருவாக்கப்பட வேண்டும் என்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. 3 மாதங்களுக்குள், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறோம்'' என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT