Published : 14 Jan 2020 11:54 AM
Last Updated : 14 Jan 2020 11:54 AM
5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு சாதி சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட மைதானத்தை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (ஜன.14) திறந்து வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பசுமை தீர்ப்பாயத்தின் வேண்டுகோளை ஏற்று பழைய புத்தகங்களை மீண்டும் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு சாதி சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என செய்திகள் வெளியாவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் "பள்ளியில் சேரும் போதே சாதிச் சான்றிதழ்களை பெற்றோர்கள் வழங்கி விடுகின்றனர். அதனை அடிப்படையாக வைத்து மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றன. அதனால், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு சாதி சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலை இல்லை" என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT