Published : 13 Jan 2020 12:11 PM
Last Updated : 13 Jan 2020 12:11 PM

மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் அருணாச்சலில் 311 பள்ளிகள் மூடல்

மாணவர் சேர்க்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால் அருணாச்சல பிரதேசத்தில் 311 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்று மாநில கல்வித் துறை அமைச்சர் தபா தேதிர் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

பேரவை கூட்டத்தில், மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் எம்எல்ஏ.வுமான நபம் துக்கி பள்ளிக் கல்வித் துறை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு, கல்வித் துறை அமைச்சர் தபா தேதிர் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் கூறியிருப்பதாவது:

பள்ளிக் கல்வி குறித்த ஒருங்கிணைந்த மாவட்ட தகவலின்படி (யூ- டிஐஎஸ்இ), மாநிலத்தில் மொத்தம் 1300 தொடக்கப் பள்ளிகளும் 300-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளும், 68 உயர்நிலை பள்ளிகளும், 103 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன.

தொடக்கநிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்குஅரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. ஆனாலும், உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புறங்களுக்கு அதிக அளவிலான மக்கள் புலம்பெயர்ந்து வருவதால், பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்தது.

இதனால், மாநிலத்தில் 311 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது, மூடப்பட்டுள்ள பள்ளிகளில் பெரும்பாலானவை, கிராமப்புற பகுதிகளிலும், நகரத்தில் இருந்து தொலைத்தூரத்திலும் உள்ளதாகும். அதேநேரத்தில், மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ள பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. மேலும், மூடப்பட்டுள்ள பள்ளிகள் அரசின் பிறதேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x