Published : 13 Jan 2020 09:35 AM
Last Updated : 13 Jan 2020 09:35 AM

போகி பண்டிகை அன்று டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: பள்ளி மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

போகிப் பண்டிகை அன்று டயர், டியூப்,ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று பள்ளி மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் போகிப் பண்டிகையை முன்னிட்டு வேப்பேரியில் உள்ள பென்டிங் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் “புகையில்லா போகி“ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் பங்கேற்று, போகியன்று டயர், டியூப், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்ற பொருட்களை எரிப்பதால் சுற்றுச் சூழலுக்கும், உடல் நலத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவியர்களிடையே விளக்கினார்.

மேலும், பிளாஸ்டிக்கை உபயோகிப்பதால் ஏற்படும் சுகாதார கேடுகள், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட, ஒரு முறை மட்டுமே உபயோகித்து தூக்கி எறிய கூடிய 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அனைவரும் புகையில்லா போகியை கொண்டாடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழிப்புணர்வு பேரணி அதைத்தொடர்ந்து, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்கர்ஷ் குளோபல் பவுண்டேஷன் சார்பில் துணிப்பைகள் வழங்கப்பட்டன. சன்ரெய்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கரும்பு துண்டுகள் வழங்கப்பட்டன. பின்னர், விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

அதில் மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திபடி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டி, பென்டிங் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை மேரியன் உஷா ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x