Published : 13 Jan 2020 08:19 AM
Last Updated : 13 Jan 2020 08:19 AM

நாசாவின் விண்வெளி பயணத் திட்டங்கள் நிலவு, செவ்வாய்க்கு செல்ல இந்தியர் தேர்வு: இரண்டு ஆண்டு கடின பயிற்சிகளை முடித்தார்

ராஜா ஜான் உர்புத்தூர் சாரி

ஹூஸ்டன்

நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு மனிதரை அனுப்பும் நாசாவின் விண்வெளி பயண திட்டங்களுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு தேர்வு நடத்தியது. இதில் 17 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அவர்களில் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 2 அண்டுகளாக நாசா பயிற்சி அளித்து வந்தது.

அவர்களில் 11 பேர் வெற்றிகரமாக பயிற்சியை முடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் நாசாவின் விண்வெளித் திட்டங்களில் இடம்பெற உள்ளனர். வரும் ஆண்டுகளில் நாசா செயல் படுத்தவுள்ள விண்வெளி பயணம்,நிலவு, செவ்வாய் கிரக பயணம் போன்றவற்றில் இவர்கள் இடம் பெறுவார்கள்.

இந்த 11 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா ஜான் உர்புத்தூர் சாரியும் (41) ஒருவர். இவரது தந்தை நிவாஸ் சாரி, ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். ஹைதராபாத்தில் பொறியியல் படித்து முடித்த அவர் உயர்கல்விக்காக அமெரிக்கா வந்தவர் அமெரிக்காவி லேயே திருமணம் செய்து குடிமகனானார்.

அமெரிக்காவில் பிறந்த ராஜா ஜான் உர்புத்தூர் சாரி, அமெரிக்க விமானப் படை அகாடமியில் படித்து பட்டம் பெற்றார். பின்னர் கலிபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப் படை தளத்தில் 461-வது பிரிவில் பணிபுரிந்து வந்தார். அதனை அடுத்து அமெரிக்க விமானப் படையில் கர்னலாக பணிபுரிந்து வந்தார். பின்னர் விண்வெளி வீரராக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க நாசா நடத்திய தேர்வில் பங்கேற்று தற்போது வெற்றிகரமாக 2 ஆண்டு பயிற்சியை முடித்துள்ளார்.

இதுகுறித்து ராஜா ஜான் உர்புத்தூர் சாரி கூறுகையில், “கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாசா நடத்திய பயிற்சியில் சேர்ந்து தற்போது பயிற்சியை முடித்துள்ளேன். நாசாவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையப் பயணத்தில் இடம்பெற தேர்வாகி இருக்கிறேன்.

அதன்பிறகு நிலவு, செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். சிறுவயதில் படிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்தினேன். அதனால் தான் தற்போது விண்வெளி வீரர் என்ற நிலைமைக்கு வர முடிந்தது” என்றார்.

வரும் 2024-ல் நிலவுக்கு முதல் முறையாக பெண் ஒருவரை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. அதன் பிறகு 2030 வரை ஒவ்வொரு ஆண்டிலும் நாசா சார்பில் நிலவுப்பயணம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாசா ஆராய்ச்சி நிலையம், விண்வெளியில் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை அமைத்து 2020 நவம்பர் மாதத்தோடு 20 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன.

மேலும் ’ஆர்ட்டெமிஸ் திட்டம்’ (Artemis Program) என்ற திட்டத்தை நாசா செயல்படுத்தவுள்ளது. மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டம்தான் அது. அந்தத் திட்டத்தில் ராஜா ஜான் உர்புத்தூர் சாரியும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீல் ஆம்ஸ்ட்ராங்

நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் அமெரிக்க விண்வெளி வீரரான நீல் ஆம்ஸ்ட்ராங். கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி அவர் நிலவில் கால் பதித்தார். ‘‘மனிதனுக்கு இது ஒரு சிறிய காலடி, ஆனால், மனித குலத்துக்கு இது பெரும் படி’’ என்று அவர் அப்போது குறிப்பிட்டார்.

அப்பல்லோ 11 விண்கலத்தின் தலைவராக நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்றார். உலகெங்கும் இருந்து 50 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்த வரலாற்றுப் புகழ்வாய்ந்த தருணத்தைக் கண்டு களித்தனர்.

ஆம்ஸ்ட்ராங்கும், அவரது சகாவான எட்வின் ஆல்ட்ரினும் மூன்று மணி நேரம் நிலவில் உலாவினர். நிலவின் மண் மாதிரிகள் சேகரிப்பு, சோதனைகள், மற்றும் படங்கள் எடுத்தல் போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபட்டு பூமி திரும்பினர். நிலவில் மனிதன் தடம் பதித்த பொன்விழா ஆண்டு 2019-ல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x