Published : 11 Jan 2020 12:54 PM
Last Updated : 11 Jan 2020 12:54 PM

கொலை செய்யும் நோக்கத்தை திருக்குறளால் கைவிட்டேன்: நாமக்கல் ஆட்சியர் 

கொலை செய்யும் நோக்கத்தை திருக்குறளால் கைவிட்டதாக நாமக்கல் ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வெண்ணாந்தூரில் பெண் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கலந்துகொண்டார்.

பெண் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் குறித்தும் அவற்றை எப்படித் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் ஆட்சியர், மாணவிகளிடையே பேசினார். மேலும் பேசிய அவர், ''10-ம் வகுப்பில் என்னுடன் படித்த நண்பன், எனக்குத் துரோகம் செய்துவிட்டான். தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடந்த செயலால் மிகவும் ஆத்திரம் அடைந்தேன்.

அவனைக் கிணற்றில் தள்ளிவிடலாமா என்று யோசித்தேன். யாருக்குத் தெரிந்துவிடப் போகிறது என்றும் நினைத்தேன். ஆனால் நான் படித்த திருக்குறள் அதைச் செய்ய விடவில்லை. மன்னிக்கக் கற்றுக்கொடுத்தது.

என்னைப் போல மாணவர்களும் மன்னிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும்'' என்று மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்தவர் மெகராஜ். 10 ஆண்டுகள் ஊரக வளர்ச்சித் துறையில் திட்ட இயக்குனராகவும், 8 ஆண்டுகள் கூடுதல் இயக்குனராகவும் பணியாற்றிய இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x