Published : 10 Jan 2020 10:06 AM
Last Updated : 10 Jan 2020 10:06 AM

தண்டவாளத்தில் டிராக் எப்படி மாற்றம் செய்யப்படுகிறது? அரசு பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல் விளக்கம்

தண்டவாளத்தில் டிராக் எப்படி மாற்றம் செய்யப்படுகிறது? என்பது குறித்து நாகை ரயில் நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நாகையை அடுத்த குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள், நாகை கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் பள்ளி பரிமாற்றத்திட்டத்தின் கீழ் புதன்கிழமை நாகை ரயில் நிலையத்துக்கு வந்தனர்.

அப்போது, ரயில் நிலையங்களில் சிக்னல்கள் எவ்வாறு கிடைக்கிறது?, தண்டவாளத்தில் எவ்வாறு டிராக் மாற்றம் செய்யப்படுகிறது? ரயில்கள் எப்படி இயக்கப்படுகின்றன? என்பன குறித்து ரயில்வே ஊழியர் ஒருவர் மாணவர்களுக்கு நேரடியாக செயல்விளக்கம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து, வங்கியின் செயல்பாடுகள், தபால் நிலையங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை நேரில் தெரிந்து கொண்டனர். பின்னர் நாகை துறைமுகத்துக்குச் சென்று, அங்கு கப்பல் கட்டும் பணி, மீன்பிடி இறங்குதளம் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும், நாகையில் உள்ள கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் ஆகிய
இடங்களுக்கும் சென்றனர்.

இறுதியாக கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்று, அங்கு செயல்படும் ஸ்மார்ட் கிளாஸ் மூலம் கல்வி பயின்றனர். இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி, பட்டதாரி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x