Published : 09 Jan 2020 04:18 PM
Last Updated : 09 Jan 2020 04:18 PM

பள்ளிப் பரிமாற்றத் திட்டம்: உயர்நிலைப் பள்ளியைக் கண்டு வியந்த கொண்டபெத்தான் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்!

பள்ளிப் பரிமாற்றத் திட்டம் சார்பில் கொண்டபெத்தான் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர், ஆண்டார் கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளியைப் பார்வையிட்டனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் கிராமப்புற பள்ளி மாணவர்களை நகர்ப்புற மாணவர்களுடன் இணைக்கும் நோக்கில் பள்ளிப் பரிமாற்றத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கொண்டபெத்தான் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆண்டார் கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளியைப் பார்வையிட்டனர்.

இந்நிகழ்விற்கு ஆண்டார் கொட்டாரம் தலைமையாசிரியர் முனியாண்டி தலைமை வகித்தார். கொண்டபெத்தான் தலைமையாசிரியர் தென்னவன், ஆசிரியர் பயிற்றுநர் உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஜமிலா வரவேற்றார். ஆண்டார் கொட்டாரப் பள்ளிக் குழந்தைகள் கொண்டபெத்தான் பள்ளிக் குழந்தைகளைக் கைகுலுக்கி வரவேற்றனர்.

பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இரு பள்ளி மாணவர்களும் ஒருவருக்கொருவர் தங்கள் பள்ளிகள் குறித்து கலந்துரையாடினர். ஆண்டார் கொட்டாரம் பள்ளியிலுள்ள ஆய்வகம், நூலகம், கணினி அறை, ஒலி- ஒளிக் கண்காட்சி வகுப்பறை, மூலிகைத் தோட்டம், பல வகையான மரங்கள் அமைந்த தோட்டம் முதலியவற்றைப் பார்வையிட்டனர்.

மேலும் களப்பயணமாக, பள்ளிக்கு அருகிலுள்ள அம்மா பூங்கா, மாநகராட்சி கழிவு நீர் வெளியேற்றும் அலுவலகம், கழிவு நீரேற்றுத் தொழிற்சாலை முதலியவற்றைப் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வு குறித்து மாணவி சத்யா கூறும் போது, "பள்ளிப் பரிமாற்றத் திட்டம் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அரசு உயர்நிலைப் பள்ளியிலுள்ள வசதிகளைப் பார்த்து வியப்படைந்தேன். களப்பயணம் எனது அறிவை விரிவு செய்கிறது. இத்திட்டம் மிகுந்த பயனைத் தருகிறது" என்றார்.

திட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் தீபா கிறிஸ்டபெல், ஜெருசா மெர்லின், சிந்தாதிரை ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x