Published : 08 Jan 2020 11:15 AM
Last Updated : 08 Jan 2020 11:15 AM

காலை பிரார்த்தனைக் கூட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பு விழிப்புணர்வு: கேரள முதல்வர் பினராயி விஜயன் நடவடிக்கை

கேரளாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலை பிரார்த்தனைக் கூட்டங்களில் அரசியலமைப்பு சட்டம் பற்றி விழிப்புணர்வு வாசிப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர் தலைவர்கள் மாநாடு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கல்லூரி மாணவர்கள் சங்கத் தலைவர்களுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயன் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:

அரசியலமைப்பு மீதான விவாதங்கள் சமூகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியலமைப்பு சட்டம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும்போது, அதை பாடத்திட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக இணைக்கவேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் சங்கத் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து எல்லா தரப்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலையில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தின் ஒரு பகுதியாக அரசியலமைப்பின் முன்னுரை கட்டாயம் வாசிக்கப்பட வேண்டும் என்ற முடிவை கேரள அரசு எடுத்துள்ளது.

இதுதொடர்பான முயற்சிகளை மேற்கொள்ள மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். அதேபோல், கல்லூரி மாணவர் சங்கத் தேர்தல்களில் பெண்களுக்கு 50 சதவிதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். பெண்களுக்கு எந்தவித தடையுமின்றி பல்கலைக்கழக நூலகங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பாலியல் கல்வி இருக்கவேண்டும். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x