Published : 08 Jan 2020 10:56 AM
Last Updated : 08 Jan 2020 10:56 AM
பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் 2100-ம் ஆண்டுக்குள் கங்கை நதி 1.4 மீட்டர் அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் பிரான்ஸ் அரசின் தேசிய அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் ஆய்வாளர்கள் இணைந்து மிகப்பெரிய ஆற்றுப்படுகைகள் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பெரிய பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்காவின் பிஎன்ஏஎஸ் இதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மிகப்பெரிய கங்கை நதிப்படுகை 1.4 மீட்டர் (140 செ.மீ.) அளவுக்கு உயரும் என்று தெரிவித்துள்ளது. ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், கங்கை நதியானது வங்கதேசம் மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களின் வழியாக செல்கிறது.
இப்பகுதியில் அடிக்கடி கடுமையான பருவமழை, கடல் மட்டம் உயர்வால் பாதிப்பு, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதிகளில் நீர் மட்ட உயர்வின் பாதிப்புகள் சரியாக கணக்கிட முடியவில்லை. அதேநேரத்தில் நீர்மட்டங்களின் உயர்வும், பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று கணிக்க முடிகிறது.
உலக அளவில் 1968 முதல் 2012-ம் ஆண்டுக்குள் நீர் மட்டங்களின் அளவு ஆண்டுக்கு சராசரியாக 3 மில்லி மீட்டர் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆற்றுப்படுகை பகுதியில் 1993-2012-ம் ஆண்டுக்குள் சராசரியாக ஒன்று முதல் 7 மி.மீ அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதேபோல், வங்கதேச தலைநகர் தாகாவில், உள்ளூர் கணக்கெடுப்பின்படி, ஆண்டுக்கு ஒன்று முதல் 2 செ.மீ. அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளதை அறிய முடிகிறது.
ஐ.நா சபையின் பருவநிலை மாற்றத்திற்கான அமைப்பின் (ஐபிசிசி) கூற்றுப்படி, பசுமையில்ல வாயுக்கள் அதிகரிப்பு, மக்கள் புலம்பெயர்வு அதிகரிப்பு, கடல் நீர்மட்ட உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஆற்றுப்படுகையில் நீர் மட்டம் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், கங்கை நதி நீட்மட்டம் நூற்றாண்டு முடிவுக்குள் 85-140 செ.மீ. அளவுக்கு உயரும். அதேபோல், பிரம்மபுத்திரா, மேகனா ஆற்றுப்படுகையிலும் நீர்மட்டம் உயரும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT