Published : 07 Jan 2020 03:03 PM
Last Updated : 07 Jan 2020 03:03 PM
பாலின சமத்துவத்துக்கான குரலாக, புனே மாணவர்கள் 3 பேர் கல்லூரிக்கு சேலை கட்டி வந்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
புனேயில் உள்ள ஃபெர்குசான் கல்லூரியில் அண்மையில் பாரம்பரிய ஆண்டுவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் கலாச்சார உடையை அணிந்து வந்தனர். எனினும் மூன்றாவது ஆண்டு படிக்கும் மாணவர்கள் 3 பேர் சேலை கட்டி வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.
ஆகாஷ் பவார், சுமித் ஹோன்வடாஜ்கர், ருஷிகேஷ் சனப் ஆகிய மூன்று மாணவர்களும் சேலை உடுத்தி, அலங்காரம் செய்து வந்தனர். இதுகுறித்து ஆகாஷ் பேசும்போது, ''ஆண்கள் உடையை மட்டுமே ஆண்கள் உடுத்த வேண்டும் என்றோ பெண்கள் மட்டுமே புடவை, சுடிதார், பாவாடைகளை அணிய வேண்டும் என்றோ எந்த சட்டமும் இல்லை.
அதனால் நாம் கல்லூரிக்கு சேலை கட்டி வந்தால் என்ன என்று தோன்றியது. கட்டி வந்து அந்த அனுபவத்தைப் பெற்றுவிட்டோம். உடன் படிக்கும் நண்பர்கள் என்ன சொல்வார்கள் என்று யோசிக்கவில்லை'' என்கிறார்.
சுமித் தனது கருத்தைக் கூறும்போது,''பாலின சமத்துவத்துக்கான தொடக்கமாக இதைப் பார்க்கிறேன். ஆரம்பத்தில் புடவையை ஏற்பாடு செய்வதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டோம்.
அதேபோல புடவையைக் கட்டுவதற்கும் கஷ்டமாக இருந்தது. எங்களுடைய தோழி ஷ்ரதா புடவையைக் கட்டிவிட்டார். அதற்குப் பிறகுதான் புடவை கட்டுவதற்குப் பெண்கள் ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கின்றனர் என்பது புரிந்தது. பாலின வேறுபாடு உடையில் இல்லை. ஆணோ, பெண்ணோ, பிறரோ பாலினத்தில் பாகுபாடு காட்டக்கூடாது'' என்றார் சுமித்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT