Published : 07 Jan 2020 12:03 PM
Last Updated : 07 Jan 2020 12:03 PM

அண்ணா பல்கலை.யைப் பிரிப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம்: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி நிறுவனங்களை சர்வதேச அளவில் மேம்படுத்த 'உயர் சிறப்பு கல்வி நிறுவனம்' என்ற திட்டத்தை மனிதவளத் துறை அமைச்சகம் 2017-ல் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின்படி, தலா 10 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1,000 கோடி நிதியுதவியும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்படும்.

அதன்படி, சென்னை ஐஐடி, வேலூர் விஐடி உட்பட தலா 8 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் உயர் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.

உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், அண்ணா பல்கலைக்கழகம் தனது தனித்தன்மையை இழந்துவிடும்; மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டியிருக்கும் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது பற்றி முடிவு எடுக்க அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகிய 5 அமைச்சர்கள், நிதி, சட்டம் மற்றும் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும். மாணவர்களின் நலன் பாதிக்காத வகையில் அரசு முடிவெடுக்கும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x