Published : 07 Jan 2020 07:58 AM
Last Updated : 07 Jan 2020 07:58 AM

இளைஞர் நாடாளுமன்ற போட்டிக்கு 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை

உயர் கல்வி படிக்கும் மாணவர்கள், தேசிய அளவிலான ‘இளைஞர் நாடாளுமன்ற போட்டிக்கு ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக யுஜிசி செயலாளா் ரஜனிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு சார்பில் 1996-ம் ஆண்டு முதல், 'இளைஞர் நாடாளு மன்றம்' தொடர்பான போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களிடம் நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்தபுரிதலை வளா்க்கவும், அதுதொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இதன்மூலம் மாணவர்களிடையே ஒழுக்கம், சகிப்புத்தன்மை போன்ற பண்புகள் வளரும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய இளைஞர் நாடாளுமன்றப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் மத்திய அரசின் http://nyps.mpa.gov.in/ இணையதளம் வழியாக ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அந்த இணையதளத்தில் போட்டி தொடர்பான கையேடு, புகைப்படங்கள், கட்டுரைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்கள், இளைஞர் நாடாளுமன்றப் போட்டிக்கு விண்ணப்பிக்க வேண்டுமென மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு யுஜிசி சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளிலும் மாதிரி நாடாளுமன்றம், மாதிரி சட்டப்பேரவை நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் (எம்.பி., எம்எல்ஏ.க்கள்) நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் எப்படி செயல்பட வேண்டும்.

மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் என்ன, அவற்றுக்கு எப்படி தீர்வு காண்பது, அதற்கான திட்டங்கள் என்ன என்பது குறித்து மாணவர்களும் உற்சாகமாக இந்த மாதிரி நாடாளுமன்றம், மாதிரி சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இதன்மூலம் எதிர்காலத்தில் இளைஞர்கள் அரசியலில் அடிவைத்து ஆரோக்கியமான சூழ்நிலை உருவாக்கும் நோக்கத்துடன் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x