Published : 04 Jan 2020 02:47 PM
Last Updated : 04 Jan 2020 02:47 PM
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலைச் சேர்ந்த மதுஷாலினியின் ஆய்வுத் திட்டம் தேர்வாகியுள்ளது. இவருக்கு வரும் மே மாதம் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய வழிமுறைகள் வழங்கப்பட உள்ளன.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த டிசம்பர் 27 முதல் 31 வரை 27-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. நாடு முழுவதுமிருந்து 657 குழந்தை விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுத் திட்டங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.
இவ்விழாவில் புதுச்சேரியிலுள்ள புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாஹே பிராந்தியங்களில் இருந்து ஆறு குழந்தை விஞ்ஞானிகள் இரு வழிகாட்டி ஆசிரியர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், ரவிச்சந்திரன் ஆகியோருடன் பங்கேற்றனர்.
இது தொடர்பாக ரவிச்சந்திரன் கூறுகையில், "நாடு முழுவதுமிருந்து மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட 657 ஆய்வுத்திட்டங்களில் இருந்து சிறந்த நம்பிக்கைக்கு உரிய 19 ஆய்வுத்திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் புதுச்சேரி காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த மதுஷாலினியின் ஆய்வும் ஒன்று. மண்பானை பாசனத்தைப் பயன்படுத்தி விதை முளைப்பு தொடர்பாக அவர் ஆய்வைத் தாக்கல் செய்திருந்தார். அவருக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வரும் மே மாதத்தில் தேர்வு செய்யப்பட்ட 19 பேருக்கு திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வழிமுறைகளை டெல்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வழங்கும்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT