Published : 03 Jan 2020 06:21 PM
Last Updated : 03 Jan 2020 06:21 PM
அரையாண்டுத் தேர்வு விடுமுறை மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டு, பள்ளிகள் ஜனவரி 6-ம் தேதி அன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் டிசம்பர் 23-ம் தேதி அரையாண்டுத் தேர்வு முடிந்தது. 'தேர்வுகள் முடிந்ததும், டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை. ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்' என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடக்க உள்ளதால், தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட்டு ஜன.3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
எனினும் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணி நள்ளிரவு வரை நீடிக்கும் என்பதால், பள்ளிகளைத் திறப்பதை ஒரு நாள் தள்ளிவைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இதையேற்று விடுமுறை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் பணி ஜனவரி 3-ம் தேதியான இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி விடுமுறை மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''2019-20 ஆம் கல்வியாண்டின் அரையாண்டுத் தேர்வு 23-ம் தேதியோடு முடிவடைந்துள்ளது. அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்த பிறகு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 6-ம் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT