Published : 02 Jan 2020 07:46 AM
Last Updated : 02 Jan 2020 07:46 AM

தமிழகத்தில் 3 அரசு பல்கலை.யில் தொலைதூரக் கல்வியில் 18 புதிய பாடப்பிரிவுகள்: யுஜிசி அனுமதி வழங்கியது

சென்னை

தமிழகத்தில் உள்ள 3 அரசு பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வி முறையில் 18 புதிய படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் தொலைதூரக் கல்வி முறையில் புதிய பட்டப்படிப்புகளை தங்களின் நிறுவனத்தில் தொடங்க கடந்த ஆண்டு யுஜிசியிடம் அனுமதி கோரியிருந்தது.

இந்நிலையில், 16 பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலை., சேலத்தில் உள்ள பெரியார் பல்கலை., சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை. ஆகிய 3 மாநில அரசு பல்கலைக்கழகங்களில் 18 புதிய பாடப்பிரிவுகளுக்கு யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக மதுரை காமராஜர் பல்கலை.யில் பி.எட். படிப்புக்கு தொலைதூரக் கல்வி முறையில் அனுமதி கிடைத்துள்ளது. மேலும், எம்.ஏ. சமூகவியல், எம்.ஏ. தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் அனுமதி கிடைத்துள்ளது.

பெரியார், தமிழ்நாடு உடற்கல்வியில் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகங்களுக்கு முறையே 13 மற்றும் 2 பாடப்பிரிவுகளுக்கு தொலைதூரக் கல்வி முறையில் அனுமதி கிடைத்துள்ளது. உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை.க்கு யோகா பாடப்பிரிவில் பிஎஸ்சி, எம்எஸ்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது. தற்போது அனுமதி பெற்ற அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில் (நாக்) அளவீடுகளின்படி 3.62 மதிப்பெண்களுக்கு குறைவாகவே உள்ளது.

இதனால், புதிய பாடப்பிரிவுகளுக்கு இந்த ஒரு ஆண்டுக்கு மட்டும்தான் மாணவர் சேர்க்கையை செய்ய முடியும். அடுத்த ஆண்டுக்கு மீண்டும் அனுமதி வாங்கவேண்டும். ‘நாக்’ தரவரிசையில் 3.62 மதிப்பெண் பெற்று இருந்தால், 5 ஆண்டுகளுக்கு புதிய பாடப்பிரிவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க வுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x