Published : 01 Jan 2020 03:28 PM
Last Updated : 01 Jan 2020 03:28 PM

இனி அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பு கட்டாயம்: உ.பி. அரசு 

கோப்புப்படம்

இனி அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பு கட்டாயம் ஆக்கப்படுவதாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது.

புத்தாண்டில் இருந்து உ.பி.யில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

''ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களின் இரண்டாவது திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு நடத்தப்படும். அப்போது ஆசிரியர்கள் உடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இரண்டு நாட்களுக்கு முன்னதாக சந்திப்பு குறித்து குழந்தைகளின் நோட்டில் ஆசிரியர் எழுதித் தருவார்.

சந்திப்பின்போது, பள்ளிக்கு மாணவர் வருவதன் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களுக்கு ஆசிரியர் விளக்க வேண்டும். குறிப்பிட்ட பள்ளியில் அதிகபட்ச இடைநிற்றல் இருக்கும்பட்சத்தில், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக்கூற வேண்டும்.

மாணவர்களின் நடத்தை குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். குடும்பப் பிரச்சினைகள் குறித்து பெற்றோர் கூறவும் அதற்கான தீர்வு குறித்து ஆசிரியர் கூறவும் ஊக்கப்படுத்த வேண்டும். யோகா, சமையல் தோட்டம், விளையாட்டு, மதிய உணவு உள்ளிட்ட பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள், பெற்றோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்'' என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு என்பது கல்வி முறையில் உள்ள ஒரு முக்கிய அங்கமாகும். எனினும் அரசுப் பள்ளிகள் இதை அரிதாகவே பின்பற்றுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x