Last Updated : 31 Dec, 2019 11:02 AM

 

Published : 31 Dec 2019 11:02 AM
Last Updated : 31 Dec 2019 11:02 AM

வீடு, கோயிலைப் போலத்தான் எங்களுக்கு பள்ளியும்: வாக்குச்சாவடி மையத்துக்குள் செருப்பு அணியாத வாக்காளர்கள்: பள்ளிக்கு மரியாதை அளிக்கும் கிராம மக்கள்

திருச்சி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களிலும் கிராம மக்கள் வாக்குச்சாவடிக்குள் செருப்பு அணியாமல் சென்றனர்.

பொதுவாக வழிபாட்டுத் தலங்களுக்கு யாரும் செருப்பு அணிந்து செல்வதில்லை. அது, இறைவனுக்கு அளிக்கும் மரியாதை. இதேபோல வீடு, பணிபுரியும் இடம், பள்ளிக்கூடம் ஆகியவற்றிலும் செருப்பு அணிவதில்லை. இத்தகைய இடங்களுக்குச் செல்வோர் தங்கள் செருப்புகளை வெளியே வாசற்படியிலேயே கழற்றிவிட்டுச் செல்வதை இன்றளவும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதேபோல, ஊரக உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற பொதுமக்களில் பலரும், வாக்குச்சாவடிகளாக செயல்பட்டு வரும் பள்ளிகளின் வகுப்பறைக்கு வெளியிலேயே தங்கள் செருப்புகளை கழற்றிவிட்டுச் சென்றனர். சில முதியவர்களும், பெண்களும் தங்கள் செருப்புகளை வாக்குச்சாவடி மையத்துக்கு வெளியிலேயே கழற்றிவிட்டுச் சென்றனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச் சாவடிகளில் நேற்று இதைக் காண முடிந்தது.

இவ்வாறு செருப்புகளைக் கழற்றிவிட்டு வாக்குச்சாவடிக்குள் செல்லக் காத்திருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

சிறு வயதில் நாங்கள் படித்த பள்ளிக்கூடம் இது. இப்போது எங்கள் பிள்ளைகள் இங்கு படிக்கின்றனர். வீட்டுக்குள், கோயிலுக்குள் செருப்பு அணிந்து செல்வோமா? அதுபோலத்தான் தேர்தல் வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தினாலும் கூட, எங்களைப் பொறுத்தவரை வீடு, கோயிலைப் போலத்தான் எங்கள் பள்ளிக்கூடமும். பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கூட்டத்துக்கு வரும்போதும் அல்லது தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களைக் காண வரும் போதும்கூட நாங்கள் செருப்பு அணிந்து வகுப்பறைக்குள் சென்றதில்லை” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x