Published : 30 Dec 2019 07:53 AM
Last Updated : 30 Dec 2019 07:53 AM

தெலங்கானா அரசு பள்ளியில் ஆசிரியராக மாறிய அமைச்சர் ஹரீஷ்ராவ்

ஹைதராபாத்:

பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நெருங்குவதையொட்டி, தெலங்கானா நிதி அமைச்சர் ஹரீஷ்ராவ் திடீரென நேற்று முன்தினம் அரசு பள்ளி ஒன்றுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், ஆசிரியராக மாறி, மாணவ, மாணவியருக்கு பாடம் சொல்லிக் கொடுத்த சம்பவம் அனைவரையும் ஈர்த்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் வருகிற மார்ச் மாதம் பத்தாம் வகுப்புக்கான அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் தேர்ச்சி விகிதம் இருக்க வேண்டும் என தெலங்கானா அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மருமகனும், அம்மாநில நிதி அமைச்சருமான ஹரீஷ் ராவ், திடீரென நேற்று முன்தினம் சங்காரெட்டி மாவட்டம், கந்தி பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு சென்றார்.

அங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியரிடம் வாய்ப்பாடு குறித்து கேள்விகள் எழுப்பினார். இதில் பல மாணவர்கள் விடை தெரியாமல் திணறினர். இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர், "இன்னமும் 3 மாதங்களில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், வாய்ப்பாடு கூட சரிவர தெரியாமல் இவர்கள் எப்படி தேர்ச்சி அடைய போகிறார்கள் ?” என அங்குள்ள ஆசிரியர்களை கேட்டார்.

பின்னர், அவரே ஆசிரியராக மாறி, கணிதம், அறிவியல், தெலுங்கு பாடங்களை மாணவர்களுக்கு நடத்தினார். அப்போது அவர், கல்வி குறித்தும், கல்வியின் பயன் குறித்தும் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x