Published : 28 Dec 2019 01:27 PM
Last Updated : 28 Dec 2019 01:27 PM
விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு உண்டா என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசின்கீழ் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் டிசம்பர் 23-ம் தேதி அன்று அரையாண்டுத் தேர்வு முடிந்தது. இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை, ‘தேர்வுகள் முடிந்ததும், டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்’ என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது.
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடக்க உள்ளதால், அரையாண்டுத் தேர்வு விடுமுறை மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை வைப்பதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நர்ஸரி, மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணாக்கர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் வைப்பது மன அழுத்தத்தை தரும்.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் வைக்கக் கூடாது என முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT