Published : 27 Dec 2019 12:28 PM
Last Updated : 27 Dec 2019 12:28 PM
இந்தியாவிலேயே முதல்முறையாக மாற்றுப் பாலினத்தவருக்கு தனிப் பல்கலைக்கழகம் உத்தரப்பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டம் ஃபசில்நகர் பகுதியில் இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உள்ளது. இதில் மாற்றுப் பாலினத்தவர்கள் ஒன்றாம் வகுப்பில் இருந்து பட்ட மேற்படிப்பு வரை படிக்கலாம். பி.எச்டி வரையும் நீட்டிக்கப்பட உள்ளது.
இந்த கல்வி நிறுவனம் அகில இந்திய மாற்றுப் பாலினத்தவர் கல்வி சேவை மையம் சார்பில் அமைக்கப்படுகிறது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் கிருஷ்ண மோகன் மிஸ்ரா கூறும்போது, ''மாற்றுப் பாலின சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் இங்கு கல்வி பயிலலாம். அவர்களுக்கென தனி பல்கலை. அமைக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. அடுத்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி இரண்டு மாற்றுப் பாலினத்தவருக்கு மாணவர் சேர்க்கை வழங்கப்பட உள்ளது.
பிப்ரவரி, மார்ச்சுக்குப் பிறகு வழக்கமான மாணவர்கள் சேர்க்கை தொடங்கும். இங்கு பட்ட மேற்படிப்புடன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் சேர்த்தே பெற முடியும்'' என்றார்.
இதுகுறித்து தொகுதி எம்எல்ஏ கங்கா சிங், ''இதன் மூலம் மாற்றுப் பாலினத்தவர் மீதான பார்வை மாறும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப்போல அனைத்துக் கல்வி உரிமைகளையும் பெற முடியும்'' என்று தெரிவித்தார்.
இந்த முன்னெடுப்புக்கு நாடு முழுவதும் உள்ள மாற்றுப் பாலினத்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT