Published : 20 Dec 2019 04:50 PM
Last Updated : 20 Dec 2019 04:50 PM

தொடர்ந்து 3-வது ஆண்டாக கல்வி ஊக்கத்தொகை: அசத்தும் கோனேரிக்குப்பம் அரசுப் பள்ளி

தொடர்ந்து 3-வது ஆண்டாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கி, கோனேரிக்குப்பம் அரசுப் பள்ளி அசத்தி வருகிறது.

ஒவ்வொரு விழாவும் மகிழ்ச்சியையும், பகிர்தலையும் மையமாகக் கொண்டே நடைபெறும். ஆனால், விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சற்றே மாறுபட்ட சிந்தனை கொண்டு பயணிக்கிறது. பண்டிகைகளின்போது மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி அங்குள்ள ஆசிரியர்கள் கற்பித்தலை ஊக்கப்படுத்துகின்றனர்.

இது தொடர்பாக அப்பள்ளி ஆசிரியர் ஆரோக்கியராஜ் கூறும்போது, ''பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடு, உதவி தேவைப்படும் மாணவர்களைச் சரியாகத் தேர்வு செய்கிறோம்.

பழங்குடியினக் குழந்தைகள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், 300 திருக்குறள்களை முடித்த மாணவர்கள், ஏழ்மை நிலையிலும் தன்னம்பிக்கையோடு படிக்க முற்படும் மாணவர்கள் ஆகியோர் இதில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இத்தகைய சூழலில் படிக்கும் மாணவர்கள் 30 பேருக்கு, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஊக்கத்தொகை மற்றும் அரிசி ஆகியவை வழங்கப்பட்டன. அவர்களைக் கண்காணித்து ஊக்கப்படுத்தி, இடைநிற்றல் இன்றிக் கல்வி கற்க வைப்பதே எங்களின் இலக்கு.

பெயர் கூற விரும்பாத கல்வி ஆர்வலரும் நானும் இதற்கான செலவை ஏற்றுக்கொண்டோம். ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவதில் மனநிறைவு அடைகிறோம்'' என்கிறார் ஆசிரியர் ஆரோக்கியராஜ்.

இந்த விழாவில் ஒலக்கூர் வட்டாரக் கல்வி அலுவலர் கோவர்த்தனர் கலந்துக்கொண்டு, கல்வி ஊக்கத்தொகை வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். விழா சிறப்புற அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர்கள் ரவிசந்திரன், பொன்னாச்சி, தேவேந்திரன், குமார், ராஜேஷ்வரி, விமலா, பொறுப்பாளர் கோபால் ஆகியோர் மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x