Published : 20 Dec 2019 11:52 AM
Last Updated : 20 Dec 2019 11:52 AM
அரசுப் பள்ளி வளாகங்களில் உள்ள பழுதான கட்டிடங்களை பொதுப்பணித் துறை உதவியுடன் உடனே இடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் பொன்னன்படுகை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத பழைய சமையல் அறை ஒன்று உள்ளது. கடந்த 17-ம் தேதி மாணவர்கள் சிலர் இப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சமையலறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மாணவர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டது. இதற்குக் கடுமையான கடண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் பழுதடைந்த கட்டிடங்கள் அக்டோபா் மாதத்துக்குள் இடிக்கப்படும் என்று கல்வித் துறைக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பியுள்ளாா். எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பொதுப்பணித் துறை அதிகாரிகளை உடனே தொடா்பு கொள்ள வேண்டும். அவர்களின் உதவியுடன் பழுதான கட்டிடங்களை இடிக்க வேண்டும்.
மேலும் வகுப்பறை, சுற்றுச்சுவர் மற்றும் கழிவறைகளைச் சுற்றி தண்ணீா் தேங்கியிருந்தால் உடனே அகற்ற வேண்டும். இது தொடா்பான வழிகாட்டுதல்களை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக முதன்மைக் கல்வி அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT