Published : 20 Dec 2019 08:54 AM
Last Updated : 20 Dec 2019 08:54 AM

சமூகத்தில் மாற்றம் ஏற்பட உயர் கல்வியில் கவனம் தேவை: உதகை மாநாட்டில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தல்

உதகை ராஜ்பவனில் நடந்த உயர்கல்வி மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். படம்: ஆர்.டி.சிவசங்கர்

உதகை

சமூகத்தில் பெரிய அளவில் திருப்புமுனை ஏற்படுத்துவதற்கு ஆய்வு அம்சம் குறித்த பாடத்திட்டத்தில் உயர் கல்வி கவனம் செலுத்த வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், உதகை ஆளுநர் மாளிகையில் இந்திய மேலாண்மை நிறுவனம் - திருச்சி இணைந்து நடத்தும் 'வேந்தரின் இலக்கு 2030: தொழில்துறை சகாப்தம் 4.0-ல் புதுமையான கல்வி முறை' என்ற உயர் கல்வி மாநாடு நேற்று தொடங்கியது.

மாநாட்டை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்து பேசியதாவது: வறுமையையும் சமத்துவமின்மையையும் குறைப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி,கல்வியே ஆகும். உலகளாவிய கல்வியில் 993 பல்கலைக்கழகங்களையும் 39,931 கல்லூரிகளையும் கொண்டு, இந்தியா, உயர் கல்வி நிறுவனங்களின் மிகப்பெரிய வலைப்பின்னல்களில் ஒன்றாக விளங்குகிறது.

அதில், தமிழ்நாடு, உயர் கல்வியில் பெருமை கொள்ளத்தக்க நிலையில் உள்ளது. தமிழகத்தில் 59 பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு சுமார் 8.64 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியேறுகின்றனர். தமிழகத்தில் உயர் கல்வி மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது.

2019-ம் ஆண்டு தேசிய கல்வி நிறுவன கட்டமைப்பு தரவரிசையில், 100 பல்கலைக்கழக பிரிவுகளில், 20 மாநில பல்கலைக்கழகங்களில் 10 பல்கலைக்கழகங்கள் தர மதிப்பை பெற்றுள்ளன. 2019-ம் ஆண்டு தேசிய கல்வி நிறுவன கட்டமைப்பு தரவரிசையில், மற்ற பல்கலைக் கழகங்களுக்கிடையே, அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிடும் வகையில், 7-வது தர வரிசையில் இடம்பெற்றுள்ளது.

சமூகத்தில் பெரிய அளவில் திருப்புமுனை ஏற்படுத்துவதற்கு, பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பதில் பங்காற்றும் வகையில், ஆய்வு அம்சம் குறித்த பாடத்திட்டத்தில் உயர் கல்வி கவனம் செலுத்த வேண்டும்.

2018-19-ம் ஆண்டு உயர்கல்வி குறித்த அனைத்திந்திய ஆய்வின்படி, நம் நாட்டில், வழங்கப்பட்ட மொத்த 40,813 முனைவர் பட்டங்களில், 5,844 முனைவர் பட்டங்கள் பெற்று, முனைவர் பட்டங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 2018-19-ம் ஆண்டு முதலாவதாக திகழ்கிறது.

2020-ம் ஆண்டு பன்னாட்டு க்யூஎஸ் தரவரிசைகளின்படி உலகிலுள்ள முதல் 150 இளம் பல்கலைக்கழகங்களில், அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்று. அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பணியை விளக்கும் வகையில் 26 தேசிய காப்புரிமைகளையும், 10 பன்னாட்டு காப்புரிமைகளையும் அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது ஊழல் வழக்கு தொடரப்படுவது எனக்குகவலையளிக்கிறது. இது நம்முடைய நாகரிகத்தின் மீதுள்ள கறையாகும். நான் ஆளுநராக பதவியேற்ற பிறகு, துணைவேந்தர் பதவிகளை நிரப்புவதில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தினோம். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உயர் கல்விக்கான இடங்களாக உள்ளன. அதில், தவறுதலற்ற, வெளிப்படைத் தன்மையுள்ள செயல்பாடுகள் மற்றும் நேர்மை ஆகியவற்றை கடைப்பிடிப்பது முக்கியமாகும் என்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த 20 துணைவேந்தர்கள், திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர்கள், தொழில்துறை வல்லுநர்கள், தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் பேராசிரியர் ராமச்சந்திரன், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் உறுப்பினர் செயலர் மல்ஹோத்ரா, காக்னிசன்ட் இந்தியத் தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி ஐஐஎம் இயக்குநர் பீமராய் மெத்ரி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x