Published : 19 Dec 2019 05:12 PM
Last Updated : 19 Dec 2019 05:12 PM
ஓபிசி மாணவர்களுக்கு நவோதயா, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தனியாக இட ஒதுக்கீடு வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் இருந்து வெளியான தகவலின்படி, நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் பள்ளிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக ஜவஹர் நவோதயா வித்யாலயா, கேந்திரிய வித்யாலயா ஆகிய பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
நாடு முழுவதும் 1,227 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 13,15,157 மாணவர்கள் படித்து வருகின்றனர். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் என்னும் அமைப்பு கேந்திரியா வித்யாலயா பள்ளிகளை நிர்வகித்து வருகிறது.
அதேபோல, 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் 661 நவோதயா பள்ளிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதில் 636 நவோதயா பள்ளிகள் தற்போது இயங்கி வருகின்றன.
இந்த இரண்டு பள்ளிகளிலும் படிக்கும் ஓபிசி மாணவர்கள் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பயன்பெறுவர். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் முறை மற்றும் சட்டத் துறையின் கருத்துகளைக் கொண்டு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவோதயா பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இரண்டும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தைப் பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT