Published : 18 Dec 2019 08:09 AM
Last Updated : 18 Dec 2019 08:09 AM
அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பருவத்தேர்வுகளும், 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி ஆண்டுத் தேர்வுகள் முறையும் அமலில் உள்ளன. அதன்படி நடப்புகல்வி ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு கடந்த 11-ம் தேதி தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை தேர்வு நடக்கிறது.
இதற்கிடையே தற்போது நடைபெற்று முடிந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் கவனமுடன், சரியான முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும்.
மதிப்பீடு செய்த விடைத்தாள்களை மற்ற ஆசிரியர்களைக் கொண்டு மறுகூட்டலுக்கு உட்படுத்த வேண்டும். குறிப்பாக பொதுத்தேர்வு நடைபெறவுள்ள 5, 8, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான விடைத்தாள்களை கூடுதல் கவனம் எடுத்து திருத்த வேண்டும்.
மேலும், விடைத்தாள் மதிப்பீட்டில் தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT