Published : 16 Dec 2019 01:57 PM
Last Updated : 16 Dec 2019 01:57 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டமளிப்பு விழாவுக்காக குடியரசுத் தலைவர் வரும் 23- தேதி புதுச்சேரி வரும் போது எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மாபெரும் போராட்டம் நடைபெறுகின்றது. இந்நிலையில் இந்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை புதுவை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணிப்புப் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பேரணியாகச் சென்ற அவர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கி அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தங்களது போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர். அத்துடன், வரும் 23- தேதி பட்டமளிப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் புதுச்சேரிக்கு வருகை தரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம் எனவும் குறிப்பிட்டனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT