Published : 16 Dec 2019 11:37 AM
Last Updated : 16 Dec 2019 11:37 AM
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் டெல்லியின் சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக துணை முதல்வர் சிசோடியா அறிவித்துள்ளார்.
தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா டிசம்பர் 9-ம் தேதியன்று லோக் சபாவிலும் டிசம்பர் 11-ம் தேதியன்று ராஜ்ய சபாவிலும் கடும் விவாதங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சட்டமாக மாறியது.
மதச்சார்பின்மை நாடாக அறியப்படும் இந்தியாவை, மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்த வேண்டாம் என குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, அசாம், குவாஹாட்டி உள்ளிட்ட நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லி ஜாமியா நகரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் சில வாகனங்களுக்குத் தீ வைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக நேற்று இரவு டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மனிஷ் சிசோடியா ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, ''தென்கிழக்கு டெல்லியின் ஓக்லா, ஜாமியா நகர், நியூ ஃப்ரண்ட்ஸ் காலனி, மதன்பூர் காதர் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. நடப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT