Published : 16 Dec 2019 09:30 AM
Last Updated : 16 Dec 2019 09:30 AM
சி.பிரதாப்
அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணியிறக்கம் செய்ய கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 46 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையே அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பணிநிரவல், பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது. தற்போது கலந்தாய்வு முடிவில் தொடக்கக் கல்வித் துறையில் 2,600 வரையான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை உபரி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு சமன்செய்ய கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாத மாணவர் சேர்க்கையின்படி பள்ளிக்கல்வித் துறையில் 13,623 பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருந்தனர். இவற்றில் ஜூலையில் நடைபெற்ற பணிநிரவல் கலந்தாய்வு மூலம் 1,514 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.
இன்னும் 12,109 பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருக்கின்றனர். 1996 முதல் 2014-ம் ஆண்டு வரையான காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் உபரியானவர்களின் விவரப்பட்டியலை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடவாரியாக தயாரித்துள்ளோம். உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்க ஏற்கனவே தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி தொடக்கப் பள்ளிகளில் உள்ள 2,600 வரையான காலி பணியிடங்களுக்கு உபரி ஆசிரியர்களை பணியிறக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக மாவட்ட வாரியாக தற்போது பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறைவான பணிக்காலத்தை கொண்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படுகின்றனர். அதிக தூரத்துக்கு பணிமாறுதல் வழங்குவதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளோம். முடிந்தவரை தற்போது பணிபுரியும் மாவட்டத்துக்குள்ளோ அல்லது அருகில் உள்ள மாவட்டங்களுக்கோ ஆசிரியர்கள் மாறுதல் செய்யப்படுவார்கள். முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் மாவட்ட அளவில் படிபடியாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
பணியிறக்கப்படும் ஆசிரியர்கள் 4, 5-ம் வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்த அனுமதிக்கப்படுவர். அவர்களின் ஊதியம் உட்பட பணிநிலையில் எந்த மாற்றமும் இருக்காது. மீதமுள்ளவர்களை குறைவான ஆசிரியர் உள்ள பள்ளிகளுக்கு சிறப்பு பணியில் அனுப்புதல், துறை அலுவல் வேலைகளுக்கு பயன்படுத்துதல் போன்ற மாற்றுப்பணிகள் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT