Published : 13 Dec 2019 05:56 PM
Last Updated : 13 Dec 2019 05:56 PM

சீன அரசின் உதவித்தொகை; இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

சீன அரசின் உதவித்தொகைக்காக தகுதி வாய்ந்த இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2020- 21 ஆம் ஆண்டுக்கான சீன அரசின் உதவித்தொகையைப் பெற இந்திய மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளங்கலை, முதுகலை, முனைவர் படிப்பைத் தொடர இந்த உதவித் தொகை வழங்கப்படும். நிரந்தர இந்தியக் குடிமக்களாக உள்ள மாணவர்களுக்கு மட்டுமே, இந்த உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் விண்ணப்பிக்கும்போது இந்தியாவில் வசிக்க வேண்டியது அவசியம்.

இந்தத் திட்டத்தின்கீழ் 40 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும். தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், உதவித்தொகை தகுதியானவர்களுக்கு வழங்கப்படும்.

இளங்கலைப் படிப்பு, முதுகலைப் படிப்பு, முனைவர் படிப்பு, ஸ்காலர் படிப்பு ஆகியவற்றைத் தொடர இந்த உதவித்தொகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இளங்கலைப் படிப்புக்கான உதவித்தொகையைப் பெற 12-ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். 25 வயதுக்குள் இருக்கவேண்டும்.

முதுகலைப் படிப்புக்கான உதவித்தொகையைப் பெற இளங்கலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். 35 வயதுக்குள் இருக்கவேண்டும். முனைவர் படிப்புக்கு முதுகலை முடித்தவராகவும் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருப்பது அவசியம்.

தகுதிவாய்ந்த நபர்கள் சீனா உதவித்தொகை மையத்தின் ஆன்லைன் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். (www.campuschina.org) அதேபோல, www.proposal.sakshat.ac.in/scholarship என்ற இணைய முகவரியிலும் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.

உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: ஜனவரி 24, 2020.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x